கொரோனா 2-வது அலையில் சித்த மருத்துவத்தால் 21,285 பேர் குணமடைந்தனர்: அமைச்சர் தகவல்
சென்னை:
சென்னை அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனை வளாகத்தில் சித்த மருத்துவத்துக்கான ஒருங்கிணைந்த கட்டளை மையத்தை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இதன்பின் அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்தில் 54 சித்தா கொரோனா சிகிச்சை மையங்கள், 11 யோகா மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சை மையங்கள், 2 ஆயுர்வேத சிகிச்சை மையங்கள், ஒரு யுனானி சிகிச்சை மையம், ஒரு ஓமியோபதி சிகிச்சை மையம் என மொத்தம் 69 இடங்களில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இங்கு 6,541 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த ஒரு மாதத்தில் 21,285 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தற்போது திறந்து வைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டளை மையம் மூலம் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை, நோயின் தன்மை அறிந்து கொள்வதற்கு பயன்படும். இந்த மையத்தை தொடர்பு கொள்ள 73587 23063 என்ற தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளி மருத்துவர்களை கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க கட்டாயப்படுத்துவது இல்லை. அப்படி எங்கேயாவது தவறுகள் நடப்பதாக கூறினால் நடவடிக்கை எடுக்கப்படும். சித்த மருத்துவத்தை ஊக்கப்படுத்த ஒரு அமைப்பு ஏற்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.