செய்திகள்
சசிகலா

எம்.ஜி.ஆர். - ஜெயலலிதா சமாதிக்கு செல்லும் சசிகலா: தீவிர சுற்றுப்பயணத்துக்கு திட்டமா?

Published On 2021-10-07 06:47 GMT   |   Update On 2021-10-07 06:47 GMT
சிறையில் இருந்து விடுதலையானவுடன் ஜெயலலிதா சமாதிக்கு செல்ல சசிகலா திட்டமிட்டார். பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்ததால் அப்போது அவரால் செல்ல முடியவில்லை.
சென்னை:

அ.தி.மு.க. தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் ஆகிறது. 1972-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 17-ந் தேதி எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை தொடங்கினார். அ.தி.மு.க. பொன்விழாவை அந்த கட்சியினர் சிறப்பாக கொண்டாட முடிவு செய்துள்ளனர்.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற சசிகலா பெங்களூரு சிறையில் இருந்து கடந்த பிப்ரவரி மாதம் வெளியில் வந்தார். அப்போது தீவிர அரசியலில் ஈடுபடப் போவதாக தெரிவித்த அவர், பின்னர் பின் வாங்கினார்.

தேர்தல் நேரத்தில் அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அவர் அறிக்கை வெளியிட்டார்.

தேர்தல் முடிவுக்கு பிறகு சசிகலாவிடம் மன மாற்றம் ஏற்பட்டது. அ.தி.மு.க. தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் தொலைபேசியில் தொடர்ந்து பேசிய சசிகலா விரைவில் உங்களை எல்லாம் சந்திப்பேன் என்று தெரிவித்து இருந்தார்.

ஆனால் சசிகலா சுற்றுப்பயணம் எதையும் மேற்கொள்ளாமல் அமைதியாகவே இருந்து வருகிறார்.



இந்தநிலையில் அ.தி.மு.க. பொன்விழா கொண்டாட்டங்கள் வருகிற 17-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி 16-ந் தேதியன்று மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சமாதிகளுக்கு சென்று சசிகலா மரியாதை செலுத்த உள்ளார்.

மறுநாள் 17-ந் தேதியன்று ராமாவரத்தில் உள்ள எம்.ஜி.ஆர். இல்லத்திற்கு செல்லவும்
சசிகலா
திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சமாதிகளுக்கு சென்று மாலை அணிவிக்கும் சசிகலா அதன் பிறகு தமிழகம் முழுவதும் தீவிர சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுதொடர்பாக அதிகாரப்பூர்வமான தகவல்கள் விரைவில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக சசிகலா ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சிறையில் இருந்து விடுதலையானவுடன் ஜெயலலிதா சமாதிக்கு செல்ல சசிகலா திட்டமிட்டார். ஆனால் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்ததால் அப்போது அவரால் செல்ல முடியவில்லை.

இந்தநிலையில் சிறையில் இருந்து வந்த பிறகு முதல் முறையாக அவர் ஜெயலலிதா சமாதிக்கு செல்வது குறிப்பிடத்தக்கது.


Tags:    

Similar News