செய்திகள்
கோப்புப்படம்

ஜம்முவில் மனைவியை துப்பாக்கியால் சுட்டுவிட்டு ராணுவ வீரர் தற்கொலை

Published On 2020-09-13 21:52 GMT   |   Update On 2020-09-13 21:52 GMT
ஜம்முவில் ராணுவ வீரர் ஒருவர் தன் மனைவியை சுட்டுக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார்.
ஜம்மு:

துணை ராணுவ பிரிவுகளில் ஒன்றான மத்திய ஆயுதப்படை போலீஸ் பிரிவில் (சி.ஆர்.பி.எப்.) போலீஸ்காரராக இருந்தவர் மதன்சிங் (வயது 38). ஜம்முவின் தலைமை அலுவலகத்தில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி பெயர் தீப்தி ராணி.

சம்பவத்தன்று இரவு பணி முடிந்த மதன்சிங், தனது துப்பாக்கியுடன் வழக்கம்போல வீட்டிற்கு புறப்பட்டுச் சென்றார். அவர் நேரடியாக, ரகூரில் உள்ள தனது மனைவியின் சகோதரி வீட்டில் தங்கியிருந்த மனைவியை பார்க்கச் சென்றார். அங்கு குடும்ப விவகாரங்களை பேசியபோது மனைவியுடன் வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே அவர் வீட்டைவிட்டு வெளியேறினார்.

இரவு 10.30 மணி அளவில் வீட்டின் தாழ்ப்பாளை மூடுவதற்காக கதவருகே வந்த மனைவியை மதன்சிங் துப்பாக்கியால் சுட்டார். இதில் தீப்திராணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

துப்பாக்கிச் சத்தம் கேட்டு ஓடி வந்த தீப்திராணியின் தங்கையும், அவரது மகளான சிறுமியும் துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்தார்கள். பின்னர் மனம் வருந்திய மதன்சிங், தன் மனைவியின் உடலுக்கு அருகே நின்று தானும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கணவன்-மனைவி இருவரது உடலையும் கைப்பற்றிய போலீசார், உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மதன்சிங், சொந்த ஊர் ஜம்முவில் உள்ளது.
Tags:    

Similar News