செய்திகள்
ராஜேஷ் தோபே

மகாராஷ்டிராவில் மீண்டும் ஊரடங்கு: சுகாதார மந்திரி சூசக தகவல்

Published On 2021-04-01 01:45 GMT   |   Update On 2021-04-01 01:45 GMT
பொதுமக்களின் உயிரை காப்பாற்றுவது மிக முக்கியம் என்று கூறிய சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே, மீண்டும் ஊரடங்கு குறித்து சூசக தகவலை வெளியிட்டார்.
மும்பை :

மகாராஷ்டிராவில் மீண்டும் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வரும் நிலையில், அதிக உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது.

கொடிய கொரோனா அரக்கனை கட்டுப்படுத்த அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. சில மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மாநிலம் முழுவதும் அரசியல், மத ரீதியான கூட்டங்கள் உள்பட அனைத்து வகையிலான மக்கள் கூடுதலுக்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

திருமணங்களில் 50 பேரும், இறுதி சடங்கில் 20 பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என்று அரசு உத்தரவிட்டு உள்ளது. மேலும் இரவு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் இரவு 8 மணிக்கு மேல் மக்கள் இன்றி வீதிகள் வெறிச்சோடி விடுகின்றன.

இந்தநிலையில் கொரோனா அதிகரிப்பால் நோயாளிகள் கூட்டம் ஆஸ்பத்திரிகளில் அதிகரித்து வருகிறது. நாக்பூர் அரசு ஆஸ்பத்திரியில் ஒரு படுக்கையில் 2 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெறுவது போன்ற காட்சிகளும் வைரலாகி வருகிறது. தனியார் ஆஸ்பத்திரிகளில் கட்டணம் அதிகம் என்பதால், பொதுமக்கள் அதிளவில் அரசு ஆஸ்பத்திரிகளை நாடி வருகின்றனர். ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 3 லட்சத்து 50 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இது கடந்த பிப்ரவரி முதல் வாரத்தில் 1 லட்சத்துக்கு கீழ் இருந்தது.

இதனால் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள சுகாதார நெருக்கடியை சமாளிக்க பகல் நேரத்திலும் ஊரடங்கை அமல்படுத்த அரசு திட்டமிட்டு வருகிறது. அதிக பொருளாதார பாதிப்பு இல்லாத ஊரடங்கு திட்டத்தை தயாரிக்கும்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதற்கு மத்தியில் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்தினால் மக்கள் மிக மோசமாக பாதிக்கப்படுவார்கள் என்று சில மந்திரிகள் கருத்து தெரிவித்து இருந்தனர்.

இந்தநிலையில் மாநில சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

ஊரடங்கை அமல்படுத்த அரசு விரும்பவில்லை. ஆனாலும் மக்களின் உயிர் மிக முக்கியம். இதன் காரணமாக கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டியது உள்ளது. எனவே வரும் நாட்களில் கடுமையான நடவடிக்கைகளை சந்திக்க மக்கள் தயாராக வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கடும் நடவடிக்கைகளை சந்திக்க மக்கள் தயாராக வேண்டும் என்று மந்திரி வேண்டுகோள் விடுத்து இருப்பது மீண்டும் முழு ஊரடங்கு அமலாகும் என்பதை அவர் சூசகமாக கூறி இருப்பதாக தெரிகிறது.

கடந்த சில நாட்களாக பொதுமக்களும் முழு ஊரடங்கை பற்றி பரபரப்பாக பேசி வருவதும் குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News