ஆறுமுகநேரியில் காய்கறி வாங்குவது போல் நடித்து ரூ.62 ஆயிரம் திருட்டு- 4 பேர் கைது
ஆறுமுகநேரி:
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி லட்சுமி மாநகரத்தை சேர்ந்தவர் சபரி லிங்கம் (வயது36). இவர் மெயின் பஜாரில் காய்கறி கடை நடத்தி வருகிறார்.
நேற்று மாலை கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்த போது அப்பகுதியை சேர்ந்த சிவராமன் என்பவர் 3 பேருடன் காய்கறிகளை வாங்கினர். பின்னர் அங்கிருந்து சென்று விட்டனர்.
இதன் பிறகு சிறிது நேரம் கழித்து பார்த்தபோது கல்லாப் பெட்டியின் உள்ளே துணிப்பையில் வைத்திருந்த ரூ.62 ஆயிரம் ரொக்கப்பணம் மாயமாகி இருந்தது.
காய்கறிகள் வாங்குவதைப் போல தனது கவனத்தை திசை திருப்பி விட்டு சிவராமனும் அவருடன் வந்தவர்களும் பணத்தை திருடி சென்றதை சபரி லிங்கம் அறிந்தார்.
இதுபற்றி அவர் ஆறுமுகநேரி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் சிவராமனை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் பணத்தை திருடியது தெரியவந்தது.
அவரை கைது செய்த போலீசார் அவருக்கு உடந்தையாக இருந்த கன்னி ராஜபுரத்தை சேர்ந்த விஜய் ஆனந்த், வீரராகவ புரத்தை சேர்ந்த பாக்கிய விநாயகம், அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சந்தனகுமார் ஆகியோரையும் கைது செய்தனர்.