திருவட்டாரில் 35 பவுன் நகை கொள்ளை- போலீசார் விசாரணை
திருவட்டார்:
திருவட்டார் அருகே மாத்தூர் தைவிளாகம் பகுதியை சேர்ந்தவர் சிசில் (வயது 38). ராணுவ வீரர்.
சிசிலின் மனைவி அஜிதா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். அஜிதா தனது குழந்தைகளுடன் வெள்ளி விளாகத்தில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு சென்றிருந்தார்.
நேற்று மாலை வீட்டிற்கு வந்த போது வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 35 பவுன் நகை மற்றும், ரூ.2 லட்சம் ரொக்க பணம் கொள்ளை போயிருந்தது.
இது குறித்து அஜிதா திருவட்டார் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்த போது அஜிதா வீட்டில் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் போலீசாரை திசை திருப்ப அங்கு மிளகாய் பொடி தூவி சென்றிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கொள்ளை நடந்த வீட்டில் கொள்ளையரின் கைரேகைகள் பதிவாகி உள்ளதா? என்று பரிசோதித்தனர்.
இதற்கிடையே கொள்ளையரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் அந்த பகுதியில் கண்காணிப்பு கேமிராக்கள் உள்ளதா? என ஆய்வு செய்தனர். மேலும் கேமிராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி அதில் கொள்ளையரின் உருவம் பதிவாகி உள்ளதா? என்பதையும் விசாரித்து வருகிறார்கள்.