உள்ளூர் செய்திகள்
அபராதம்

திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை கொரோனா விதிமுறைகளை மீறிய 1.52 லட்சம் பேருக்கு அபராதம்

Published On 2022-01-26 10:12 GMT   |   Update On 2022-01-26 10:12 GMT
திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை கொரோனா விதிமுறைகளை மீறியதாக 1 லட்சத்து 52 ஆயிரம் பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

திருவள்ளூர்:

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க கட்டுப்பாடுகள் தீவிரப் படுத்தப்பட்டு உள்ளது. கொரோனா விதிமுறைகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை கொரோனா விதிமுறைகளை மீறியதாக 1 லட்சத்து 52 ஆயிரம் பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்க்கீஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று பரவலை குறைக்கும் வகையில் இரவு நேர ஊரடங்கு, வார இறுதி நாளில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. பொது இடங்களில் கொரோனா விதிமுறைகளை பொதுமக்கள் கட்டாயம் கடைபிடிக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஆனாலும், முககவசம் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்காத நபர்களுக்கு பல்வேறு துறை மூலம் இது வரையில் 1 லட்சத்து 52 ஆயிரத்து 148 பேருக்கு ரூ.3 கோடியே 11 லட்சத்து 50 ஆயிரத்து 856 அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதில் கடந்த 12.01.2022 முதல் அரசு உத்தரவுப்படி அபராத தொகை ஒருவருக்கு ரூ.200-ல் இருந்து ரூ.500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

ஜனவரி 1 முதல் 24 வரை 3,131 பேரிடம் அபராதமாக ரூ.6 லட்சத்து 95 ஆயிரம் வசூல் செய்யப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் இதுவரை பொதுமக்களுக்கு முதல் தவணை 90 சதவீதமும், இரண்டாவது தவணை 66 சதவீதமும், 7696 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசியும் செலுத் தப்பட்டுள்ளது.

கொரோனா நோய் தொற்று பரவலை எதிர்கொள்ள, நோய் தடுப்பு மையங்களில் 1400 படுக்கைகளும், அரசு மருத்துவமனைகளில் 330 ஆக்சிஜன் படுக்கைகளும், திருவள்ளூர் மாவட்ட மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் 400 ஆக்சிஜன் படுக்கைகளும், தனியார் மருத்துவமனைகளில் 1881 படுக்கைகளும் தயார் நிலையில் உள்ளன.

தற்போது வரையில் 7595 பேருக்கு கொரோனா தொற்று பாதித்து, அவர்களில் 7214 பேர் வீடுகளில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சுகாதாரத் துறையினர் மூலம் கபசுர குடிநீர் அடங்கிய மருத்துவ பெட்டகம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் கொரோனா கட்டுப் பாட்டு அறையின் மூலம் தொலைபேசி மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

கொரோனா நோய் தாக்குதலை எதிர்கொள்ளும் பொருட்டு திருவள்ளுர் மாவட்டத்தில் போதுமான மருந்து, மாத்திரைகள், போது மான ஆக்சிஜன் படுக்கைகள், ஆக்சிஜன் உருளைகள் தயாராக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News