செய்திகள்
டாக்டர் அம்பேத்கர்

அமெரிக்க பாராளுமன்றத்தில் அம்பேத்கரை கவுரவிக்கும் தீர்மானம் - இந்திய வம்சாவளி எம்.பி. தாக்கல்

Published On 2021-04-15 22:14 GMT   |   Update On 2021-04-15 22:14 GMT
அமெரிக்க பாராளுமன்றத்தில் அம்பேத்கரை கவுரவிக்கும் தீர்மானம் ஒன்றை இந்திய வம்சாவளி எம்.பி. தாக்கல் செய்தார்.
வாஷிங்டன்:

இந்திய அரசியல் சாசனத்தின் சிற்பி, அம்பேத்கரின் பிறந்த நாள் இந்த ஆண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. உலகமெங்கும் உள்ள இளம் தலைவர்கள், சமத்துவத்துக்கான அவரது பார்வையால் ஈர்க்கப்படலாம் என்பதற்காக அம்பேத்கரை கவுரவிக்கும் தீர்மானம் ஒன்றை இந்திய வம்சாவளி எம்.பி.யான ரோகன்னா அமெரிக்க பாராளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

இந்த தீர்மானத்தை அவர் அமெரிக்க பாராளுமன்ற பிரதிநிதிகள் சபையில் நேற்று முன்தினம் அறிமுகம் செய்த பின்னர் டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டார். அதில் அவர், “உலகமெங்கும் உள்ள இளம் தலைவர்கள் அம்பேத்கரின் புத்தகங்களை வாசிப்பார்கள், சமத்துவத்துக்கான அவரது பார்வையால் ஈர்க்கப்படுவார்கள் என்ற நம்பிக்கையில் பி.ஆர். அம்பேத்கரை கவுரவிக்கும் எனது தீர்மானத்தை மறுஅறிமுகம் செய்துள்ளேன்” என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து 2-வது ஆண்டாக இந்த தீர்மானத்தை அவர் அமெரிக்க பாராளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

2010-ம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத்தில், அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா பேசும்போது, “நீங்கள் யார், நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் என்பதைப்பற்றி கவலையின்றி, ஒவ்வொரு நபரும் கடவுள் கொடுத்த திறனை நிறைவேற்ற முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். டாக்டர் அம்பேத்கரைப் போன்ற ஒரு தலித் தன்னை உயர்த்திக்கொண்டு, அரசியல் சாசனத்தின் அம்சங்களை எழுத முடியும். அது அனைத்து இந்தியர்களின் உரிமைகளையும் பாதுகாக்கிறது” என கூறியதை தீர்மானத்தில் ரோகன்னா குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

Similar News