செய்திகள்
கார் தலைகுப்புற கவிழ்ந்து கிடந்த காட்சி.

ஏலகிரியில் டயர் வெடித்ததால் மலையில் கார் உருண்டது- வாலிபர்கள் உள்பட 6 பேர் படுகாயம்

Published On 2021-04-05 02:36 GMT   |   Update On 2021-04-05 02:36 GMT
ஏலகிரிமலைக்கு சுற்றுலா வந்தவர்களின் கார் டயர் வெடித்ததால் மலையில் உருண்டது. அதில் சென்னை வாலிபர்கள் உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஜோலார்பேட்டை:

சென்னை பகுதியைச் சேர்ந்த நரசிம்மனின் மகன் மதன் (வயது 27). கடலூர் பகுதியைச் சேர்ந்த வேல்முருகனின் மகன் உதயகுமார் (27). திருவள்ளூர் பி.எம்.நகர் பகுதியைச் சேர்ந்தவர் இம்மானுவேல் (18). இவருடைய சகோதரர் அனிஷ்குமார் (28). வேலூர் பகுதியைச் சேர்ந்த அசோகனின் மகன் பாலாஜி (27). சென்னை பகுதியைச் சேர்ந்த பரந்தாமனின் மகன் இம்ரான் (27). இதில் இமானுவேல் பிளஸ்-2 மாணவராவார். மற்றவர்கள் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர்.

இவர்கள் 6 பேரும் வாரவிடுமுறையை முன்னிட்டு திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரிமலையை சுற்றி பார்க்க சென்னையில் இருந்து ஒரு காரில் ஏலகிரிமலைக்கு நேற்று முன்தினம் வந்தனர்.

மலையில் உள்ள பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்த இவர்கள் இரவில் அங்குள்ள உள்ள ஒரு விடுதியில் தங்கி ஓய்வெடுத்தனர். நேற்று காலை அனைவரும் விடுதியில் இருந்து புறப்பட்டு சென்னையை நோக்கி காரில் புறப்பட்டனர்.

காரை அனிஷ்குமார் ஓட்டினார். கார் ஏலகிரிமலை அடிவாரத்தை நோக்கி இறங்கி கொண்டிருந்தது. மலையில் மேலிருந்து 2-வதாக உள்ள பாரதியார் கொண்டை ஊசி வளைவில் வந்தபோது, திடீரென காரின் முன்பக்க டயர் வெடித்தது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் இருந்து தறிக்கெட்டு ஓடி அருகில் இருந்த ஒரு 7 அடி உயர குன்றின் மீது செங்குத்தாக ஏறியது.

அந்த நேரத்தில் குன்றின் மீது இருந்த ஒரு மரத்தில் கார் மோதி அருகில் இருந்த 16 அடி ஆழ பள்ளத்தில் தலைகீழே உருண்டு மீண்டும் சாலையில் விழுந்து உருண்டது. சினிமாவில் வருவது போல் நடந்த இந்த சம்பவத்தில் கார் அப்பளம்போல் நொறுங்கியது. காரில் பயணம் செய்த 6 பேரும் படுகாயம் அடைந்தனர்.

அப்போது அந்த வழியாக சென்ற சுற்றுலா பயணிகளும், சுகாதார ஊழியர் கோபி என்பவரும் ஓடி வந்து படுகாயம் அடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் இம்மானுவேல் மற்றும் காரை ஓட்டி வந்த அனிஷ்குமார் ஆகியோர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறித்து ஏலகிரிமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தங்கராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News