செய்திகள்
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க கலெக்டர் அதிரடி உத்தரவு
5 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மாணவர்களையும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கி வரும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 2021-22ம் கல்வியாண்டில் ஒரு சில பள்ளிகளில் முதல் வகுப்பில் சேர்க்கை இல்லாமலும், 2-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை மிகக்குறைந்த மாணவர்கள் உள்ளனர்.
இந்த பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிப்பது தொடர்பான ஆய்வுக்கூட்டம் கலெக்டர் வினீத் தலைமையில் நடைபெற்றது. முதன்மை கல்வி அதிகாரி ரமேஷ் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் கலெக்டர் கூறியதாவது:-
5 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மாணவர்களையும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆசிரியர்கள் உயர்தர வகையில் கற்பித்தல் முறையை ஏற்படுத்தி அரசு பள்ளிகளை நோக்கி மாணவர்களை வர வைக்க வேண்டும். மாணவர்கள் குறைவாக உள்ள பள்ளிகளில் புதன்கிழமைதோறும் பஞ்சாயத்து அட்மிசன் விழா நடத்தி மாணவர்கள் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும்.
வீடு, வீடாக சென்று மாணவர் சேர்க்கை நடத்தவும், ஒலிபெருக்கி, சுவரொட்டி மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தி மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும். பள்ளியை பழுது பார்க்க தேவையான நிதி தொடர்பாக கலெக்டரை தொடர்பு கொள்ளலாம்.
மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகளின் வட்டார கல்வி அதிகாரி, தலைமை ஆசிரியர் ஆகியோர் மாணவர் எண்ணிக்கை குறைவுக்கான காரணம் குறித்து கலெக்டரிடம் தெரிவித்து அதை சரி செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.