உள்ளூர் செய்திகள்
தாராபுரத்தில் கடைகளை உடைத்து ரூ.3லட்சம் பொருட்கள் கொள்ளை
வியாபாரம் முடிந்ததும் ரூ.3 லட்சம் பணத்தை கல்லாப்பெட்டியில் வைத்துவிட்டு சசிகுமாரும், தண்டபாணியும் வீட்டிற்கு சென்றனர்.
தாராபுரம்:
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பொள்ளாச்சி சாலையில் கோட்டாட்சியர் அலுவலகம் அருகே தனியார் வெங்காய மண்டி உள்ளது. இதனை சகுனிபாளையம் பகுதியை சேர்ந்த சசிகுமார், தண்டபாணி ஆகியோர் நடத்தி வருகின்றனர்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் காரணமாக ரூ.50ஆயிரத்திற்கு மேல் பணத்தை எடுத்து செல்ல முடியாது என்பதால் நேற்றிரவு வியாபாரம் முடிந்ததும் ரூ.3 லட்சம் பணத்தை கல்லாப்பெட்டியில் வைத்துவிட்டு சசிகுமாரும், தண்டபாணியும் வீட்டிற்கு சென்றனர்.
இன்று காலை 2 பேரும் வந்து பார்த்தபோது கடையின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது கல்லாப்பெட்டி உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.3லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. கல்லாப்பெட்டியில் பணம் வைக்கப்பட்டதை யாரோ மர்மநபர்கள் நோட்டமிட்டு அதனை கொள்ளையடித்துள்ளனர்.
இதுகுறித்து தாராபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
இதேப்போல் தாராபுரம் எல்லீஸ்நகர் பகுதியில் முகமது இஸ்மாயில் என்பவர் பேக்கரி கடை நடத்தி வருகிறார். மேலும் சிகரெட், பீடி உள்ளிட்ட பல்வேறு பொருட்களையும் விற்பனை செய்து வந்தார்.
நள்ளிரவு அங்கு புகுந்த மர்மநபர்கள் பீடி, சிகரெட் பாக்கெட் உள்ளிட்ட பொருட்களை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் தாராபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.