உள்ளூர் செய்திகள்
சூறை காற்றுடன் பெய்த மழையால் ஏலகிரி மலை சாலையில் சாய்ந்து விழுந்த மரம்.

ஏலகிரியில் சூறை காற்றுடன் பலத்த மழை- மலைப்பாதையில் மரங்கள் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு

Published On 2022-04-15 07:13 GMT   |   Update On 2022-04-15 07:13 GMT
ஆம்பூரிலும் நேற்று மாலை கோடை மழை சூறை காற்றுடன் வெளுத்து வாங்கியது. இதில் பஸ் நிலையம் உள்பட தாழ்வான பல இடங்களில் மழை வெள்ளம் குளம் போல் தேங்கியது.
ஜோலார்பேட்டை:

திருப்பத்தூர் மாவட்டம் ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏலகிரி மலை பகுதியிலும் நேற்று மாலை திடீரென கருமேகங்கள் சூழ்ந்து சூறாவளி காற்று வீசி இடி மின்னலுடன் கனமழை கொட்டியது. மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

தொடர் விடுமுறையால் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏலகிரி மலை சுற்றுலாவிற்கு ஆயிரக்கணக்கானோர் வாகனங்களில் வந்தனர்.

நேற்று மாலை திடீரென கனமழை பெய்ததால் ஏலகிரி மலையில் உள்ள 1வது, 2வது, 4வது, மற்றும் 7வது கொண்டை ஊசி வளைவு சாலைகளில் ஆங்காங்கே மரங்கள் சரிந்து சாலையில் விழுந்தது.

இதனால் மலைப்பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களும், பஸ்கள் உள்ளிட்டவைகள் மேலிருந்து கீழ்நோக்கியும், கீழிருந்து மேல் நோக்கியும் செல்ல முடியாமல் தவித்தது.

இருபுறங்களிலும் சுமார் 500-க்கும் மேற்பட்ட வாகனங்கள் நெரிசலில் சிக்கியது. சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் வரை நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றது.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நெடுஞ்சாலை துறையினர் காவல்துறை, தீயணைப்புத்துறை மற்றும் ஊராட்சி மன்ற நிர்வாகத்தினர் ஒன்றிணைந்து சுமார் ஒரு மணி நேரம் போராடி 4 வளைவுகளில் ஆங்காங்கே விழுந்திருந்த 7 மரங்களை சாலைகளில் இருந்து ஜேசிபி எந்திரம் மூலம் அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர்.

இதனால் மலைப்பாதையில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதேபோல் நேற்று மாலை ஜோலார்பேட்டை பகுதியிலும் கனமழை பெய்தது. இதில் பல இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்தது. தாழ்வான பல இடங்களில் தண்ணீர் தேங்கியது.

ஆம்பூரிலும் நேற்று மாலை கோடை மழை சூறை காற்றுடன் வெளுத்து வாங்கியது. இதில் பஸ் நிலையம் உள்பட தாழ்வான பல இடங்களில் மழை வெள்ளம் குளம் போல் தேங்கியது.
Tags:    

Similar News