வழிபாடு
கோட்டை மாரியம்மன்

கேட்ட வரங்கள் தரும் கோட்டை மாரியம்மன்

Published On 2022-02-10 05:31 GMT   |   Update On 2022-02-10 07:57 GMT
மாசித்திருவிழாவை பொறுத்தவரை சாதி, மத பேதமின்றி நடத்தப்படும் திருவிழாவாக இருக்கிறது. இந்த திருவிழாவை மத நல்லிணக்க திருவிழா என்று கூறுவதில் மிகையில்லை.
திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவிலாக, திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் விளங்கி வருகிறது. ஆங்கிலேயர் காலத்து படை வீரர்கள் மாரியம்மனை வைத்து வழிபட்டு வந்துள்ளனர். மலைக்கோட்டைக்கு அருகில் மாரியம்மன் கோவில் அமையப் பெற்றதால் காலப்போக்கில் கோட்டை மாரியம்மன் என்ற பெயர் விளங்கியதாக கூறப்படுகிறது. இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க கோட்டை மாரியம்மன் கோவில் மாசித்திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த திருவிழாவில் பூச்சொரிதல் விழா, கொடியேற்றம், பூக்குழி இறங்குதல், தசாவதாரம், மஞ்சள் நீராட்டுதல், அம்மனின் ஊஞ்சல் மற்றும் தெப்ப உற்சவம் ஆகியவை நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு மாசித்திருவிழாவில் நாளை (வெள்ளிக்கிழமை) பூக்குழி இறங்குதல் நடக்கிறது. அதைத்தொடர்ந்து தசாவதாரம், மஞ்சள் நீராட்டுதல், கொடியிறக்கம் நடைபெறுகிறது. அதன் பின்னர் அம்மனின் ஊஞ்சல் உற்சவம், தெப்ப உற்சவம் நடைபெற்று மாசித்திருவிழா நிறைவு பெறுகிறது. பொதுவாக கோட்டை மாரியம்மனிடம் வேண்டுதல் வைக்கும் பக்தர்கள் அந்த வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் அக்னிச்சட்டி உள்பட பல்வேறு நேர்த்திக் கடன்களை செலுத்துவது வழக்கம்.

அந்த வகையில் கேட்டவருக்கு கேட்ட வரங்கள் தரும் கோட்டை மாரியம்மனாக இங்கு அம்மன் அருள்பாலித்து வருகிறார். மாசித்திருவிழாவை பொறுத்தவரை சாதி, மத பேதமின்றி நடத்தப்படும் திருவிழாவாக இருக்கிறது. இந்த திருவிழாவை மத நல்லிணக்க திருவிழா என்று கூறுவதில் மிகையில்லை.
Tags:    

Similar News