தொழில்நுட்பம்
ரயில்வேக்கு டெலிகாம் சேவை வழங்கும் உரிமையை பெற்ற ரிலையன்ஸ் ஜியோ
இந்திய ரயில்வேக்கு டெலிகாம் சேவையை வழங்கும் உரிமையை ரிலையன்ஸ் ஜியோ பெற்று இருக்கிறது. #Jio
இந்திய ரயில்வேக்கு டெலிகாம் சேவையை வழங்கும் உரிமையை ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனம் பெற்றுள்ளது. அதன்படி 2019, ஜனவரி 1ம் தேதி முதல் இந்திய ரயில்வே ஜியோ சேவையை பயன்படுத்துகிறது. இதன் மூலம் இந்திய ரயில்வே டெலிகாம் செலவீனங்களை குறைந்தபட்சம் 35 சதவிகிதம் வரை குறைக்க முடியும் என கூறப்படுகிறது.
கடந்த ஆறு ஆண்டுகளுக்கும் அதிகமாக இந்திய ரயில்வே பாரதி ஏர்டெல் நிறுவன சேவையை பயன்படுத்தி வந்தது. ரயில்வே ஊழியர்களுக்கு என மொத்தம் 1.95 லட்சம் மொபைல் போன் இணைப்புகளை (சி.யு.ஜி.) இந்திய ரயில்வே பயன்படுத்தியது. இதற்கென இந்திய ரயில்வே மொத்தம் ரூ.100 கோடியை ஆண்டு கட்டணமாக செலுத்தி வந்தது. இதற்கான வேலிடிட்டி இந்த ஆண்டு டிசம்பர் 31-க்குள் நிறைவுறுகிறது.
இதுகுறித்து ரயில்வே போர்டு வெளியிட்டு இருக்கும் உத்தரவில், ரெயில்டெல் நிறுவனத்திற்கு புதிய மொபைல் போன் இணைப்புகளை வழங்கும் உரிமை ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனத்திற்கு வழங்கப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போதைய டெலிகாம் சேவை டிசம்பர் 31, 2018-க்குள் நிறைவுறுகிறது.
புதிய சி.யு.ஜி சேவைகள் ஜனவரி 1, 2018 முதல் அமலுக்கு வரும் என ரயில்வே வெளியிட்டிருக்கும் உத்தரவில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. சி.யு.ஜி. இணைப்புகளில் டெலிகாம் சேவை வழங்கும் நிறுவனங்கள் குறிப்பிட்ட குழுவினருடன் அழைப்புகளை மேற்கொள்ளவும், எஸ்.எம்.எஸ். அனுப்பிக் கொள்ளவும் முடியும்.
இந்திய ரெயில்வே பயன்படுத்த இருக்கும் ரிலையன்ஸ் ஜியோ சி.யு.ஜி. சேவையில் 4ஜி / 3ஜி இணைப்புகள், அழைப்புகள் உள்ளிட்டவற்றை இலவசமாக வழங்குகிறது. ஜியோ நிறுவனம் ரெயில்வேக்கு நான்கு திட்டங்களை வழங்குகிறது.
இவை மூத்த அதிகாரிகள்: 60 ஜி.பி. சலுகை, மாதம் ரூ.125 விலையிலும், 45 ஜி.பி. சலுகை மாத கட்டணம் ரூ.99 விலையிலும், இணை செயலாளர் பணியில் உள்ள அதிகாரிகளுக்கு 30 ஜி.பி. சலுகை ரூ.67 விலையிலும், க்ரூப் சி பணியாளர்களுக்கு ரூ.49 விலையில் சலுகைகள் வழங்கப்படுகிறது.
சாதாரண பணியாளர்களுக்கு 25 ஜி.பி. டேட்டா ரூ.199 விலையில் வழங்கப்படுகிறது. இதன் பின் பயனர்கள் ஒரு ஜி.பி. டேட்டாவை பயன்படுத்த ரூ.20 கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும். ரெயில்வே பணியாளர்கள் ரூ.10 கட்டணத்திற்கு 2 ஜி.பி. கூடுதல் டேட்டா பயன்படுத்தலாம்.
ஏர்டெல் நிறுவனம் தற்சமயம் 1.95 லட்சம் பணியாளர்களுக்கு சேவையை வழங்கி வரும் நிலையில், ரிலையன்ஸ் ஜியோ 3.78 லட்சம் ரெயில்வே பணியாளர்களுக்கு சேவையை வழங்குகிறது. இதன் காரணமாக ரெயில்வேயின் டெலிகாம் சேவை கட்டணங்கள் 35 சதவிகிதம் வரை குறையும் என மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.