ஆன்மிகம்
அமிர்தகடேஸ்வரர்கோவிலில் சிறப்பு வழிபாடு

அமிர்தகடேஸ்வரர்கோவிலில் சிறப்பு வழிபாடு: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

Published On 2021-02-12 07:10 GMT   |   Update On 2021-02-12 07:10 GMT
அமிர்தகடேஸ்வரர் கோவிலில் ஓதுவார் மூர்த்திகள் அபிராமி அந்தாதி திருப்பாடல்களை பாட பாட ஒவ்வொரு பாட்டிற்கும் தீப நைவேத்தியம் செய்தும் வழிபட்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு அமிர்தகடேஸ்வரரும், அபிராமி அம்மனும் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள். அபிராமி அம்மன் தனது பக்தர் அபிராமி பட்டரின் பக்திக்கு இணங்க தை அமாவாசை நாளில் அமாவாசையை பவுர்ணமியாக மாற்றிய அதிசய நிகழ்வின் காரணமாக ஆண்டுதோறும் அபிராமி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைப்பெற்று வருவது வழக்கம்.

நேற்று ஓதுவார் மூர்த்திகள் அபிராமி அந்தாதி திருப்பாடல்களை பாட பாட ஒவ்வொரு பாட்டிற்கும் தீப நைவேத்தியம் செய்தும் வழிபட்டனர். மேலும் 26-வது குருமகா சன்னிதானம் மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பெண்களுக்கு சுமங்கலி பிரசாதம் கொடுத்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். பின்னர் அபிராமி அம்மனுக்கு பால், தேன், இளநீர், பன்னீர், சந்தனம், விபூதி மற்றும் வாசனை திரவிய பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

பின்னர் அபிராமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து அர்ச்சனை நடைப்பெற்றது. முன்னதாக ஆணைக்குளத்தரையில் அமைந்துள்ள எதிர்காளிஸ்வரர் கோவிலில் இருந்து 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் அபிராமி அம்மனுக்கு பால்குடம் சுமந்து வந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News