ஆன்மிகம்
திருவானைக்காவல் கோவிலில் சொக்கப்பனை அமைக்க முகூர்த்தக்கால் நடப்பட்டது
கார்த்திகை தீப திருநாளையொட்டி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி கோவிலில் சொக்கப்பனை அமைக்க முகூர்த்தக்கால் நடப்பட்டது.
கார்த்திகை மாதத்தில் வரும் பரணி நட்சத்திர தினத்தன்று மலை கோவில்களிலும், பவுர்ணமி தினத்தன்று சர்வ ஆலயங்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்படும். அதன்படி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி கோவிலில் நாளை(ஞாயிற்றுக்கிழமை) மாலை 6.45 மணியளவில் கார்த்திகை தீபத்திருநாள் சொக்கப்பனை ஏற்றப்பட்ட உள்ளது.
இதனை முன்னிட்டு கோவிலின் கார்த்திகை கோபுரம் அருகே சொக்கப்பனை அமைக்கப்பட்டு கொளுத்தப்படும். அதனை உற்சவர்கள் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேவரி கண்டருளுவர்.
கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் சொக்கப்பனை பந்தல் அமைக்க முகூர்த்தக்கால் நடும் விழா கார்த்திகை கோபுரம் அருகே நேற்று நடைபெற்றது. அப்போது, சுமார் 10 அடி உயரம் உள்ள தென்னை மரக்காலின் நுனியில் சந்தனம், மாவிலை மற்றும் பூமாலை உள்ளிட்ட மங்களப்பொருட்கள் அணிவிக்கப்பட்டு கோவில் அர்ச்சகர்கள் வேதங்கள் சொல்ல புனிதநீர் தெளிக்கப்பட்டது. அதன் பின்னர் முகூர்த்தக்காலை கோவில் ஊழியர்கள் நட்டனர். இந்த பந்தல் காலை சுற்றி சுமார் 5 அடி அகலத்திற்கும் 10 அடி உயரத்திற்கும் சொக்கப்பனை அமைக்கும் பணி நடைபெற உள்ளது.