செய்திகள்
சென்னை விமான நிலையத்தில் பறிமுதலான தங்கத்தை படத்தில் காணலாம்.

சிறப்பு விமானத்தில் கடத்தி வந்த 4 கிலோ தங்கம் பறிமுதல்- 14 பேர் கைது

Published On 2020-10-18 02:13 GMT   |   Update On 2020-10-18 02:13 GMT
துபாயில் இருந்து சென்னைக்கு சிறப்பு விமானத்தில் கடத்தி வந்த ரூ.2 கோடியே 18 லட்சம் மதிப்புள்ள 4 கிலோ 140 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக 14 பேரை கைது செய்தனர்.
ஆலந்தூர்:

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து சிறப்பு விமானங்கள் வந்தன. இந்த விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரிக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து துபாயில் இருந்து சென்னை வந்த விமானங்களில் பயணம் செய்த சென்னை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 3 பெண்கள் உள்பட 14 பேர் மீது சந்தேகம் அடைந்த சுங்க இலாகா அதிகாரிகள், அவர்களது உடைமைகளை சோதனை செய்தனர். அதில் எதுவும் கிடைக்கவில்லை.

இதையடுத்து 14 பேரையும் தனி அறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தனர். அதில் 14 பேரின் உள்ளாடைகளில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2 கோடியே 18 லட்சம் மதிப்புள்ள 4 கிலோ 140 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக 14 பேரையும் கைது செய்த சுங்க இலாகா அதிகாரிகள், தொடர்ந்து அவர்களிடம் விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News