செய்திகள்
கைது

கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருடியவர் கைது

Published On 2021-10-12 11:27 GMT   |   Update On 2021-10-12 11:27 GMT
கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருடியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கீழப்பழுவூர்:

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கண்டராதித்தம் மேட்டுத்தெரு கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு இந்த பகுதியில் மழை பெய்த நிலையில் மாரியம்மன் கோவிலில் நீண்ட நேரமாக சத்தம் கேட்டுள்ளது. இதனால் சந்தேகமடைந்த கோவிலுக்கு அருகில் இருந்தவர்கள், அங்கு சென்று பார்த்தபோது ஒருவர் உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தை திருடிக்கொண்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டனர். இதையடுத்து கோவிலுக்கு அருகில் இருந்தவர்கள் வருவதை கண்ட நபர் தப்பிக்க முயற்சித்து, அருகில் இருந்த கரும்பு வயலில் பதுங்கினார். பொதுமக்கள் நீண்ட நேரம் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து கரும்பு வயலுக்கு வெளியே இளைஞர்கள் பதுங்கியிருந்தனர். சிறிது நேரம் கழித்து கரும்பு வயலில் இருந்து வெளியே வந்த நபரை அப்பகுதியில் பதுங்கி இருந்த இளைஞர்கள் மடக்கி பிடித்தனர். இதையடுத்து அவரிடம் இருந்து ரூபாய் நோட்டுகள் மற்றும் சில்லறை காசுகளை மீட்டனர். அதில் சுமார் ரூ.50 ஆயிரம் இருந்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர். மேலும் இது குறித்து கிராம மக்கள் திருமானூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசாரிடம், அந்த நபரை ஒப்படைத்தனர். இதையடுத்து அவரை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். இதில் அவர் கல்லக்குறிச்சி மாவட்டம் நத்தாப்பூர் கிராமத்தை சேர்ந்த பச்சமுத்துவின் மகன் ரமேஷ் என்பது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரமேசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News