கந்தம்பாளையம் அருகே ரிக்வண்டி தொழிலாளி கல்லால் அடித்துக் கொலை
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே நல்லூர் கந்தம்பாளையம் முதலியார் தெருவை சேர்ந்தவர் கணேசன் (30). இவர் திருமணமாகி மனைவியை பிரிந்து தாய் வீட்டில் வசித்து வருகிறார்.
அதே பகுதியைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்டவர் சரவணன் (32). மூளை வளர்ச்சி இல்லாததால் அவரது பெற்றோர்கள் அவரை கவனிக்காமல் விட்டுவிட்டனர். இதனால் அப்பகுதியில் சுற்றிக் கொண்டிருப்பார்.
சாலையில் செல்பவர்களை அடிக்கடி கீழே கிடக்கும் கற்களை எடுத்து கல்லால் தாக்கி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலை மணியனூர் அண்ணமார் சுவாமி கோவில் பின்புறம் சரவணன் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்தவழியாக வந்த கணேசனை திடீரென சரவணன் கற்களால் கல்லால் தாக்கினார்.
இதில் படுகாயமடைந்த கணேசனை திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.
இந்த சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் சரவணனை கட்டிப்போட்டு சரமாரியாக தாக்கினர். இது குறித்து நல்லூர் போலீசாருக்கு அப்பகுதியை சேர்ந்தவர்கள் தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சரவணனை கைது செய்து திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொதுமக்கள் அதிகமாக கூடும் பகுதியில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.