செய்திகள்
மழைநீரில் சிக்கிய பெண் டாக்டரின் கார்

ரெயில்வே பாலத்தின் கீழ் தேங்கிய மழைநீரில் கார் சிக்கி பெண் டாக்டர் பலி

Published On 2021-09-18 03:52 GMT   |   Update On 2021-09-18 03:52 GMT
அன்னவாசல் பகுதியில் ரெயில்வே பாலத்தின் கீழ் தேங்கிய மழைநீரில் கார் சிக்கி பெண் டாக்டர் பலியானாார்.
அன்னவாசல்:

புதுக்கோட்டை மாவட்டம், துடையூர் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மனைவி சத்தியா(வயது 35). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள அரசு மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று மாலை மாமியாருடன் ஒரு காரில் புறப்பட்டு துடையூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். காரை சத்தியா காரை ஓட்டினார்.

அவர்கள் துடையூர் அருகே வந்து கொண்டிருந்தபோது அப்பகுதியில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக அங்குள்ள ரெயில்வே பாலத்தின் கீழ் பகுதியில் மழைநீர் தேங்கி நின்றது. அந்த வழியாக கார் வந்தபோது மழைநீரில் சிக்கிக் கொண்டது. மாமியார் கார் கதவை திறந்து கொண்டு வெளியேறினார். ஆனால், சீல்ட் பெல்ட் அணிந்து இருந்ததால் சத்தியாவால் உடனடியாக வெளியே வர முடியவில்லை.

சிறிது நேரத்தில் நீரில் மூழ்கி சத்தியா உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த வெள்ளனூர் மற்றும் கீரனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நீரில் மூழ்கி இறந்த சத்தியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News