செய்திகள்
கனிமொழி

மு.க.ஸ்டாலின் கூறியதை அரசியல் கண்ணோட்டத்தில் பார்ப்பது தவறு- கனிமொழி

Published On 2019-11-11 05:47 GMT   |   Update On 2019-11-11 05:47 GMT
சர்வாதிகாரியாக செயல்படுவேன் என்று மு.க.ஸ்டாலின் கூறியதை அரசியல் கண்ணோட்டத்தில் பார்ப்பது தவறு என்று தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி:

தூத்துக்குடி விமான நிலைய ஆலோசனை குழு கூட்டம் இன்று தூத்துக்குடியில் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து தூத்துக்குடி வந்த பாராளுமன்ற குழு தி.மு.க. துணை தலைவரும், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி நிருபர்களிடம் கூறியதாவது:-

உள்ளாட்சித் தேர்தல் நிச்சயமாக நடைபெற வேண்டும் என்பது தான் தி.மு.க. தலைவர் ஸ்டாலினின் கோரிக்கையாக உள்ளது. திராவிட முன்னேற்றக் கழகமும் தேர்தலை எதிர் கொள்வதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. தி.மு.க. கொடுத்த அழுத்தம் காரணமாகதான் உள்ளாட்சி தேர்தலை நடத்த அ.தி.மு.க. அரசு தயாராக உள்ளனர். ஆகவே தி.மு.க. தேர்தலுக்கு தயாராக இருக்கிறது. விரைவில் இதற்கான அறிவிப்பை தி.மு.க. தலைவர் அறிவிப்பார்.

பா.ஜ.க.-சிவசேனாக்குள் பல பிரச்சனைகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. தேர்தல் முடிந்த பிறகு ஆட்சியை அமைக்க முடியாத அளவுக்கு பல குழப்பங்கள் நீடித்து கொண்டிருக்கிறது. இப்பொழுதுதான் பல குழப்பங்கள் ஆரம்பமாகியுள்ளது. தொடர்ந்து என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.

முதல்வர் உள்பட அமைச்சர்கள் அனைவரும் முதலீடு ஈர்ப்பதற்காக வெளிநாடு சென்று வந்தார்கள். ஆனால் எந்த முதலீடு ஈர்த்து வந்தார்கள் என்று தெரியவில்லை. இதுவரை எந்த தொழில்நுட்பமும் வரவில்லை. மக்களின் செலவில் அவர்கள் வெளிநாடு சுற்றி பார்த்ததாக இருக்கட்டும்.



மு.க.ஸ்டாலின் சர்வாதிகாரியாக செயல்படுவேன் என்று சொல்வது கட்சியின் வளர்ச்சிக்காக முடிவெடுக்க வேண்டும் என்றால் அதை தைரியமாக, தெளிவாக எடுக்க வேண்டும் என்பதற்காக கூறியிருக்கிறார். அதை அரசியல் காரணங்களுக்காக, புதிய கண்ணோட்டத்தில் பார்ப்பது தவறு.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ஜோயல், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெகன், தூத்துக்குடி மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்த சேகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Tags:    

Similar News