ஆன்மிகம்
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் காலசம்ஹார விழா நடைபெற்ற போது எடுத்த படம்.

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் காலசம்ஹார விழா

Published On 2021-04-24 04:40 GMT   |   Update On 2021-04-24 04:40 GMT
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் காலசம்ஹார விழா நடைபெற்றது. இதில் பக்தர்கள் முக கவசம் அணிந்து சாமி தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் ஆண்டு தோறும் சித்திரை திருவிழாவை முன்னிட்டு காலசம்ஹார திருவிழா நடைபெறுவது வழக்கம்.

இந்தநிலையில் இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் 17-ந்் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தினமும் சாமி புறப்பாடு கோவில் வளாகத்திற்குள் நடைபெற்று வந்தன.

காலசம்ஹார விழாவானது, தீவிர சிவபக்தரான மார்க்கண்டேயரின் ஆயுள் 16-ல் முடிவடைந்ததை தொடர்ந்து மார்க்கண்டேயரின் உயிரை பறிக்க எமன் வந்தார். மார்க்கண்டேயர் 107 சிவாலயங்களை வணங்கி விட்டு 108-வது கோவிலாக திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு வந்தார். அப்போது மார்க்கண்டேயர் சிவபெருமானை தழுவி மந்திரங்கள் உச்சரித்து கொண்டிருந்தார்.

அப்போது மார்க்கண்டேயரை நோக்கி எமதர்மன் பாசக்கயிறை வீசும் பொழுது, அது அவர் மீது மட்டும் விழாமல், சிவலிங்கத்தின் மேலும் விழுந்தது. உடனே கடும் கோபத்துடன் லிங்கத்தில் இருந்து வெளிப்பட்ட சிவ பெருமான் எமனை எட்டி உதைத்து, தன் சூலாயுதத்தால் சம்ஹாரம் செய்தார். இதன் மூலம் சிவபெருமான் காலசம்ஹாரமூர்த்தி என அழைக்கப்படுகிறார். அப்போது மார்க்கண்டேயருக்கு என்றும் பதினாறாக இருக்க அருள்பாலித்தார்.

இந்த நிலையில் 6-ம் நாள் நிகழ்ச்சியாக சித்திரை மாதம் மகம் நட்சத்திரத்தன்று காலசம்ஹார மூர்த்திக்கு சிறப்பு அபிஷேகமும், பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்து தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் முன்னிலையில் காலனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் திரளான பக்தர்கள் முக கவசம் அணிந்து கொண்டும் சமூக இடைவெளியை பின்பற்றியும் சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
Tags:    

Similar News