செய்திகள்
கேரளாவில் 90 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி
கேரளாவில் 90 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது என அம்மாநில சுகாதாரத்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரம்:
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 15,692 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது வரை 1,67,008 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 23,683 பேர் உயிரிழந்துள்ளனர்.
கேரளாவில் மற்ற மாநிலங்களைவிட கொரோனா பரவல் அதிகமாகவே உள்ளது. இது ஒருபுறம் இருக்க, அங்கு தடுப்பூசி போடும் பணியும் வேகமாக நடந்து வருகிறது.
இந்நிலையில், கேரளாவில் 90 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டு உள்ளது என சுகாதாரத் துறை மந்திரி வீணா ஜார்ஜ் கூறி உள்ளார்.
நேற்று நிருபர்களை சந்தித்த அவர், கேரளாவில் கொரோனா அறியப்படுபவர்களில் 75 சதவீதம் பேர் அறிகுறி அற்றவர்களாக இருப்பதால் சோதனைகளை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மக்கள் கொரோனா விதிமுறைகளை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். கொரோனா தடுப்பூசி போடாதவர்களே மரணத்தைத் தழுவுகிறார்கள். எனவே யாரும் 2 தவணை தடுப்பூசி போட தயங்கக் கூடாது. அதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. மாநிலம் முழுவதும் தகுதி படைத்த 90 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, 5 மாவட்டங்களில் சுமார் 100 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்...ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தவருக்கு பா.ஜனதா தேசிய துணைத் தலைவர் பதவி