தமிழகம் முழுவதும் தனியார் மருத்துவமனைகளில் குவியும் கொரோனா நோயாளிகள்
சென்னை:
தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதால் அரசு ஆஸ்பத்திரிகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. அறிகுறி உள்ளவர்களுக்கு உடனடியாக பரிசோதனை செய்யப்படுவதால் தொற்று பாதிப்பு வேகமாக கண்டறியப்படுகிறது.
சென்னை மட்டுமின்றி பெரும்பாலான மாவட்டங்களில் தொற்று அதிகரித்து உள்ளதால் தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா வார்டுகள் நிரம்பி வருகின்றன.
கொரோனா நோயாளிகளை தனியார் மருத்துவமனைகளில் அனுமதித்து சிகிச்சை அளிக்க மத்திய அரசு விதிமுறைகளை வகுத்துள்ளது.
அதன்படி, தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. சென்னையில் உள்ள 82 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதில் பிரபலமான மருத்துவமனைகளில் இடங்கள் முழுமையாக நிரம்பி விட்டன. மொத்தமுள்ள 5600 படுக்கைகளில் 3000 படுக்கைகளில் நோயாளிகள் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
ஒவ்வொரு பகுதியிலும் உள்ள முக்கியமான தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட அனைத்து படுக்கைகளும் நிரம்பி விட்டன.
இதேபோல் செங்கல்பட்டு, காஞ்சிரம், கோவை, சேலம், மதுரை, திருச்சி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் அதிகளவு தங்கி சிகிச்சை பெறுகின்றனர்.
‘ஸ்டாப் கொரோனா தமிழ்நாடு’ என்ற இணைய தளத்தில் சிகிச்சை பெற விரும்புவோர் காலி படுக்கைகள் விவரம், சிகிச்சை பெறுவோர் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
எந்த மருத்துவமனையில் இடம் உள்ளது என்பதை தெரிந்து கொண்டு கொரோனா பாதித்தவர்கள் அழைத்து செல்லலாம்.
ஐ.சி.யூ.வார்டு படுக்கைகள் எத்தனை, ஆக்சிஜன் படுக்கைகள் விவரம் போன்றவை தெளிவாக அந்த வெப்சைட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் கிண்டி கிங் இன்ஸ்டிடியூட், ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனை, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை ஆகியவற்றில் உள்ள வார்டுகளில் 70 சதவீதம் நிரம்பி விட்டன.
கீழ்ப்பாக்கம், ஸ்டான்லி மருத்துவமனைகளில் படுக்கைகள் அதிகளவு காலியாக உள்ளன.