லைஃப்ஸ்டைல்

அழிந்து போன பாரம்பரிய விளையாட்டுகள்

Published On 2019-06-24 02:59 GMT   |   Update On 2019-06-24 02:59 GMT
தற்போதைய கால கட்டத்தில் செல்போன் பயன்பாட்டின் ஆதிக்கத்தால் ஆரோக்கியமும், உடல் திறனையும் வளர்க்கும் இதுபோன்ற விளையாட்டுகள் மறைந்துபோய் விட்டன என்பது கவலை அளிக்கும் விஷயமாகும்.
தமிழக பாரம்பரிய விளையாட்டுகளுக்கு எழுதப்படாத விதிமுறைகள் உண்டு. இன்று டாஸ்’ போட்டு விளையாட்டை தொடங்குவது போல கிராமிய விளையாட்டுகளில் ஆட்டத்தை தொடங்க ஆளை தேர்ந்தெடுப்பதற்கு ஒரு முறை வைத்திருக்கிறார்கள். தப்பா ஒண்ணு, தவளை ரெண்டு என்று ஆரம்பித்து சுருங்கி விழு என்று முடியும் சிறுபாடலை பாடுவார்கள். சாப்பூட் திரி, காயா-பழமா?, ஒத்தையா-ரெட்டையா? என்று வாய்மொழிகளை கூறும் வழக்கமும் இருக்கிறது. இதில் ஏதாவது ஒன்றை பாடி இறுதி வரி யார் மீது முடிகிறதோ அவர் ஆட்டத்தை தொடங்க வேண்டும் என்பது விதி.

விளையாட்டுப் பருவம் என்றாலே அது குழந்தைப் பருவம்தான். குழந்தைகளுக்கான விளையாட்டுகளும் ஏராளம். வீடும், வீதியும், பொட்டலும், ஊர் மந்தையும் குழந்தைகளின் விளையாட்டு களங்கள்.

குழந்தைகளின் ஆட்டங்கள் பெரும்பாலும் குழு நிலையில் ஆரம்பித்து பிறகு வருவோரையும் தம்முடன் இணைத்துக் கொள்வதாக இருக்கும். இவர்களின் ஆட்டங்கள் பொழுதுபோக்கும், மனமகிழ்ச்சியும் தருபவை. போட்டி விளையாட்டுகள், உடல் திறன் விளையாட்டுகள், அறிவு விளையாட்டுகள் என சில வகைகள் உண்டு. கிட்டிப்புள், பம்பரம், கோலி, கபடி, நீச்சல் என்று பருவம் தோறும் விளையாட்டுகள் மாறும்.

சிறுவர்களின் பச்சைக்குதிரை ஆட்டம் பிரபலமானது. இது உயரம் தாண்டுதலின் முன்னோடி விளையாட்டு. இதில் முதலில் ஒருவர் தரையில் காலை நீட்டி அமருவார். மற்றவர்கள் காலை தாண்டுவார்கள். பிறகு கால்மேல் கால் வைத்து உயரம் கொஞ்சம் கூட்டப்படும். அதையும் எல்லோரும் தாண்டிவிட்டால் கைகளை நீட்டுவார், பிறகு குனிந்து நிற்பார், கழுத்தை மட்டும் குனிவார், இறுதியில் நிமிர்ந்து நிற்க அனைவரும் தாண்டுவர். இதில் எந்த நிலையில் ஒருவர் தாண்ட முடியாமல் போகிறாரோ அவர் தோற்றவராக காலை நீட்டி உட்காருவார், மற்றவர்கள் தாண்டுவார்கள். இது உடல் திறனை சோதிப்பதும், கூட்டுவதுமான விளையாட்டு.



பூப்பறிக்க வருகிறோம் ஆட்டம் சிறுமிகளுக்கானது. முதலில் இரு குழுவாக பிரிவர். ஒரு பிரிவினர் ஒவ்வொருவருக்கும் பூக்களின் பெயரைச் சூட்டிக்கொள்வர். பிறகு எதிர் குழுவினர் பூப்பறிக்க வருகிறோம் என்று பாடிக்கொண்டே முன்னே வருவர். என்ன பூ என்று கேட்டதும் ஒரு பூவின் பெயரைச் சொல்வார்கள். அந்த பூ பெயருடையவர் முன்னே வந்து நிற்க (கயிறு இழுத்தல் ஆட்டம் போல) அவரை தங்கள் பக்கம் இழுக்க எதிர் குழு முயற்சிக்கும். இதை பூக்குழுவினர் தடுப்பர். இந்த ஆட்டம் பூக்களை அறிதல் மற்றும் உடல்திறனை மேம்படுத்துகிறது. குழுவாக செயல்படுதல், பொறுப்புணர்ச்சியை வளர்க்கிறது.

இளம் வயதுப் பெண்கள் ஆடும் ஆட்டங்கள் மிகவும் குறைவு. அதுவும் வீட்டுக்குள் ஆடும் ஆட்டமே. கடும் கட்டுப்பாடு, மிகுதியான வேலை நேரம் தவிர்த்து பல்லாங்குழி, தாயம், சில்லுக்கோடு, தட்டாமலை போன்ற ஆட்டங்களை ஆடுவர்.

வெளியில் சென்றால் கும்மியாட்டம், கோலாட்டம் ஆடுவார்கள். திருவிழா காலங்களில்தான் இந்த விளையாட்டுகள் மிகுதியாக ஆடப்படும். மகளிர் விளையாட்டுகள் மன மகிழ்ச்சியையும், பொழுதுபோக்கையும் அடிப்படையாக கொண்டுள்ளன. இவ்விளையாட்டுகள் அறிவுத்திறனையும், உடல்திறனையும் மேம்படுத்துகின்றன.

தற்போதைய கால கட்டத்தில் செல்போன் பயன்பாட்டின் ஆதிக்கத்தால் ஆரோக்கியமும், உடல் திறனையும் வளர்க்கும் இதுபோன்ற விளையாட்டுகள் மறைந்துபோய் விட்டன என்பது கவலை அளிக்கும் விஷயமாகும்.

Tags:    

Similar News