வழிபாடு
5 சபைகள்

சிதம்பரம் தலத்தில் உள்ள 5 சபைகள்

Published On 2022-01-03 05:57 GMT   |   Update On 2022-01-03 05:57 GMT
சித்சபையில் நிகழும் ஆனந்த நடனத்தை சிவகாம சுந்தரியார் இடைவிடாமல் கண்டுகளிப்பது, ஆன்மாக்களின் பிறவிப்பிணியைப் போக்குவதற்கே என்று குமரகுருபர சுவாமிகள் பாடியுள்ளார்.
சிதம்பரம் தலத்தில் சித்சபை, கனகசபை, நடனசபை, தேவசபை, ராஜசபை ஆகிய 5 சபைகள் உள்ளன. இந்த 5 சபைகளின் சிறப்புகள் வருமாறு:-

சித்சபை

சிதம்பரம் கோவில் கட்டிட அமைப்பு அனைத்தும் தத்துவ அடிப்படையில் அமைந்தவையாகும். வாஸ்து, ஆகம விதிகள் பிறழாது நெறிப்பட அமைந்த கோவில் இது. குறிப்பாக, சித்சபையானது மரத்தால் நமது உடல் அமைப்பை அப்படியே ஒத்துள்ளது. சித்சபை மேல் 21600 பொன் ஓடுகள் பொருத்தி, 72000 ஆணிகள் அடிக்கப்பட்டுள்ளன.

ஒரு மனிதனின் நாடி நரம்புகளின் எண்ணிக்கை 72000 அவன் ஒரு நாளைக்கு விடும் சுவாச காற்றின் எண்ணிக்கை 21600. மேல் உள்ள 9 கலசங்கள், 9 சக்திகள், நவரத்தினங்கள், நவகிரகங்கள் ஆகியவற்றை குறிக்கும்.

9 வெளிவாசல்கள் மனிதனின் 9 துவாரங்களை குறிக்கும். 224 பலகை அமைப்புகள் 224 உலகங்களை குறிக்கும். 64 சந்தன கை மரங்கள் ஆயகலைகள் 64-ஐ குறிக்கும். சதாசிவ பீட 4 தங்க தூண்களும் 4 வேதங்களை குறிக்கும். அடுத்து சதாசிவ பீட 6 தங்க தூண்களும் 6 சாஸ்திரங்களை குறிக்கும். ருத்ரபீட 28 மரத்தூண்கள் 28 ஆகமங்களைக் குறிக்கும். ருத்ரபீட ரகசியம் பார்த்திடும் 96 பல கனிகள் (ஜன்னல்) 96 தத்துவங்களை குறிக்கும். விஷ்ணு பீடத்தின் கதவுகள் அவித்தையையும், ரகசியத் திரை மாயையும் குறிக்கும்.

ஐந்து தூண்களும் ஐம்பொறிகளை குறிக்கும் இங்கு நடராஜப் பெருமானின் திருமுடியிலுள்ள சந்திரனில் இருந்து உண்டான ஸ்படிகலிங்கமும், மாணிக்க மயமான ரத்தின சபாபதியும், சுவர்ண ஆகர்ஷண பைரவரும், நித்ய உத்ஸவர் முதலானவர்களும் எழுந்தருளியிருக்கின்றனர். இச்சிற்றம்பலத்தின் உள்ளே செல்வதற்கு ஐந்து படிகள் இருக்கின்றன. இவற்றிற்கு பஞ்சாட்சரபடிகள் என்று பெயர். இப்படிகள் இருபுறமும் யானை உருவங்கள் இருக்கின்றன.

சித்சபையில் நிகழும் ஆனந்த நடனத்தை சிவகாம சுந்தரியார் இடைவிடாமல் கண்டுகளிப்பது, ஆன்மாக்களின் பிறவிப்பிணியைப் போக்குவதற்கே என்று குமரகுருபர சுவாமிகள் பாடியுள்ளார். ஆடல்வல்லான் ஆடல்புரியும் இடம் சிற்றம்பலம் இதையே தான் சித்சபை என்று அழைக்கப்படுகிறது. நடராஜர் இச்சபையில் திருநடனம் புரிந்து ஐந்து தொழில்களையும் நிகழ்த்துகிறார்.

கனகசபை (பொன்னம்பலம்)

சிற்றம்பலத்திற்கு முன் உள்ளது (எதிரம்பலம்) பொன்னம்பலம் என்ற கனகசபை. நடராஜருக்கு மகா அபிஷேகங்கள் நடக்கும் இடம் இதுவேயாகும். இங்கு ஸ்படிக லிங்கத்திற்கு தினசரி ஆறுகால பூஜையும், பகல் இரண்டாம் காலத்தில் ரத்தின சபாபதிக்கு அபிஷேக வழிபாடுகளும் நடைபெறும்.
பொன்னம்பலத்தின் முகப்பை ஆதித்த சோழன் கொங்கு நாட்டிலிருந்து கொண்டு வந்த மாற்றுயர்ந்த பொன்னால் வேய்ந்தான் என்று சேக்கிழார் சுவாமிகள் கூறியுள்ளார்.

கனகசபையின் 18 தூண்டுகள் 18 புராணங்களை குறிக்கிறது. கனகசபையின் ஐந்து தளவரிசைக் கற்கள் பஞ்சபூதங்களின் தத்துவத்தை குறிக்கும்.
கனகசபையில் நின்றுதான் சிதம்பர ரகசியத்தை பக்தர்கள் தரிசிப்பார்கள். மேலும் ஆடல் வல்லானின் ஆட்டத்தை கனக சபையின் மூலமே தரிசிக்க முடியும்.

நடனசபை (நிருத்த சபை)

சிதம்பரத்திற்கு ‘‘நிருத்த சேத்ரம்’’ என்ற மற்றொரு பெயரும் உண்டு. ஆடல்வல்லான் ஊர்த்தவ தாண்டவம் செய்தருளிய இடம் இது. சுவாமிக்கும் அம்பாளுக்கும் நடனப் போட்டி நடக்கும் போது சுவாமி தமது காது குண்டலம் கீழே விழ அதை தனது வலது கால் விரல்களால் எடுத்து காதில் மாட்டுமாறு காலை மேலே தூக்கி நடனம் ஆடிடவே அம்பாள் காலை தூக்கி ஆட முடியாமல் போகவே சுவாமி ஆடலில் வெற்றி பெற்றார். இத்தகு தெய்வ திருநடன சிறப்பு பெற்ற இடம்தான் நடனசபை என்ற நிருத்த சபை ஆகும். சுவாமி இங்கு ஆடிய தாண்டவத்திற்கு ஊர்த்துவ தாண்டவம் என்று பெயர்.

சுவாமிக்கு தென்பகுதியில் ஸ்ரீசரபேஸ்வரர் எழுந்தருளியிருக்கிறார். இவருக்கு அபிஷேக ஆராதனைகள், அர்ச்சனைகள் செய்து வழிபாடு செய்ய சகல தோஷங்களும் விலகும். ராகுகாலத்தில் நெய்தீபம் ஏற்றினால் சிறந்த பலன்களைப் பெற்று தரும்.

தேவசபை (பேரம்பலம்)

பேரம்பலத்தில் ஐந்து மூர்த்திகளும் எழுந்தருளியிருக்கின்றனர். இங்குதான் மாதந்தோறும் திருஆதிரை நட்சத்திரத்தன்று சோமாஸ்கந்தருக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். இங்குதான் பொது தீட்சதர்கள் ஆலயப் பணிகள், வழிபாடுகள் குறித்து சபை கூட்டுவர். இப்பேரம்பலத்தை, மணவில் கூத்தனான காலிங்கராயன் விக்கிரசோழன் செம்பினால் வேய்ந்தான். இப்பேரம்பலத்திற்கு மூன்றாம் குலோத்துங்க சோழன் திருப்பணி செய்தான்.

ராஜசபை

ஆயிரம் கால் மண்டபம் ராஜசபை என்று அழைக்கப்படுகிறது. இங்கு 999 தூண்கள் மட்டுமே உள்ளன. மீதமான ஒன்று நடராஜப் பெருமானின் ஊன்றிய கால். ஆக, மொத்தம் 1000 கால் மண்டபம் ராஜசபையாக விளங்குகிறது.

இது 5-வது சபை யாகும். இங்குதான் ஆனி (மிதுனம்), மார்கழி (தனுசு) மாதங்களில் நடைபெறும் ஒன்பதாம் திருநாள்களில் நடராஜப் பெருமான் திருத்தேரில் எழுந்தருளி நான்கு வீதிகளில் உலா வந்த பின்னர் இரவில் இந்த ஆயிரங்கால் மண்டபத்தில் வீற் றிருந்து, விடியற் காலையில் அபிஷேகம் நடைபெற்று, பத்தாம் நாள் பிற்பகலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்குத் திருக்காட்சியளிப்பார். பிறகு பெருமான் முன்னதாகவும், பெருமாட்டி பின்னாலும் மாறி மாறி நடனம் செய்து கொண்டு சித்சபைக்குச் செல்வர்.

ராஜசபையில்தான் எல்லா வகையான இதிகாச, புராணங்கள் அனைத்தும் அரங்கேற்றம் செய்யபட்டன. இன்றும் பல காரியங்கள் ராஜசபையில் தான் அரங்கேற்றம் செய்யப்படுகின்றன.

Tags:    

Similar News