செய்திகள்
பருவநிலை மாநாடு- பிரதமர் மோடிக்கு கட்டளையிட்ட 8 வயது சிறுமி
பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவது தொடர்பான சட்டத்தை பிரதமர் மோடி உடனடியாக அமல்படுத்தவேண்டும். அதுவரை தான் ஓயப்போவதில்லை என மணிப்பூரை சேர்ந்த 8 வயது சிறுமி தெரிவித்துள்ளார்.
மாட்ரிட்:
ஐ.நா. சார்பில் உலக பருவநிலை மாற்றம் தொடர்பான 25-வது மாநாடு ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் நடைபெற்று வருகிறது. இதில் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த பருவநிலை மாற்ற ஆர்வலர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்த மாநாட்டில் ஸ்விடன் நாட்டை சேர்ந்த 16 வயது நிரம்பிய சிறுமி கிரேட்டா தன்பெர்க் உள்ளிட்ட பருவநிலை மாற்ற ஆர்வலர்கள் பங்கேற்றனர்.
இந்நிலையில், அந்த மாநாட்டில் இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த 8 வயதே நிரம்பிய சிறுமி லிசிப்ரியா கங்குஜம் பங்கேற்றார்.
இந்த மாநாட்டில் பேசிய கங்குஜம்,' பருவநிலை மாற்றம் குறித்து உலக நாடுகளின் தலைவர்கள் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார்கள் என்பதை மதிப்பிடவே நான் இங்கு வந்துள்ளேன். இது பருவநிலை மாற்றம் தொடர்பாக நடவடிக்கைகள் எடுக்கவேண்டிய தருணம். இது உண்மையான அவசரநிலை’ என தெரிவித்தார்.
முன்னதாக இந்த மாநாட்டில் பங்கேற்க வந்த கங்குஜம் தனது கையில் ஒரு பதாகை ஏந்தி வந்திருந்தார். அந்த பதாகையில் எழுதியிருந்ததாவது,
''நரேந்திரமோடி அவர்களே, பருவநிலை மாற்ற மசோதாவை நடப்பு பாராளுமன்ற கூட்டத்தொடரிலேயே தாக்கல் செய்து சட்டமாக்குங்கள். அவ்வாறு செய்தால் அடுத்த தலைமுறையினர் உங்களை புகழும். நீங்கள் பருவநிலை மாற்ற சட்டத்தை அமல்படுத்தும் வரை நான் ஓயப்போவதில்லை’’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.
பிரதமர் மோடி பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த தேவையான சட்டத்தை இயற்ற வேண்டுமேன லிசிப்ரியா கடந்த ஜூன் மாதம் பாராளுமன்ற வளகாத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.