வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்- கிராம மக்கள் திடீர் மறியல்
விருத்தாசலம்:
விருத்தாசலம் அருகே கம்மாபுரம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. நேற்று இரவும் விடிய விடிய கன மழை பெய்தது. இதனால் கம்மாபுரம் பகுதியில் உள்ள ஏரி, குளங்கள் நிரம்பி வழிகிறது.
மேலும் நெய்வேலி என்.எல்.சி. சுரங்க பகுதியில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் வெளியேற வழியில்லாமல் கம்மாபுரம் பகுதியில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. அதோடு வயல்வெளிகளுக்குள் தண்ணீர் பாய்ந்ததால் விவசாயிகள் அதிர்ச்சிக்குள்ளானார்கள்.
தொடர்ந்து மழை பெய்து வருவதால் அந்த பகுதியில் உள்ள மக்கள் விடிய விடிய தூங்காமல் தவித்தனர். எனவே இன்று காலை கம்மாபுரம் பகுதி மக்கள் ஒன்று திரண்டனர். அவர்கள் விருத்தாசலம்- பரங்கிப்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்த போலீசார் மற்றும் அதிகாரிகள் விரைந்தனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். அதனை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.