செய்திகள்
அமர்நாத் யாத்திரை: முன்பதிவு தற்காலிகமாக நிறுத்தம்
கொரோனா தொற்று பரவல் காரணமாக அமர்நாத் பனிலிங்க கோவில் புனிதப் பயணத்துக்கான முன்பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
ஜம்மு:
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் இமயமலைப் பகுதியில் அமர்நாத் என்ற குகைப் பகுதியில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசிக்க நாடு முழுவதும் ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரை சென்று வருகிறார்கள். இந்த யாத்திரை ஆண்டுதோறும் நடைபெறும்.
கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு யாத்திரை ரத்து செய்யப்பட்டது.
இந்த ஆண்டுக்கான யாத்திரை ஜூன் 28ல் தொடங்கி, ஆகஸ்ட் 22 வரை நடக்கும் என கோவில் நிர்வாகம் அறிவித்து இருந்தது. இதற்கான முன்பதிவு ஏப்ரல் 1-ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், கொரோனா தொற்று பரவலின் இரண்டாவது அலை நாடு முழுவதும் தீவிரமடைந்துள்ளதை அடுத்து, அமர்நாத் பனிலிங்க புனித பயணத்துக்கான முன்பதிவு, தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக, ஸ்ரீ அமர்நாத் கோவில் வாரியம் அறிவித்தது.
நிலைமை கட்டுக்குள் வந்த பின், முன்பதிவு மீண்டும் துவங்கப்படும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.