ஆன்மிகம்
ராமேசுவரம் 3-ம்பிரகாரத்தின் பழைய படம்.

250 வயதை கடந்த ராமேசுவரம் 3-ம் பிரகாரம்

Published On 2021-09-22 06:58 GMT   |   Update On 2021-09-22 08:25 GMT
250-வது ஆண்டுகளை கடந்து, கம்பீரமாக ராமேசுவரம் கோவிலுக்கு பெருமை சேர்க்கும் இந்த 3-ம் பிரகாரத்தை பாரம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டும் என்பது பக்தர்களின் விருப்பமாகும்.
அகில இந்திய புண்ணியதலங்களில் ஒன்றாக விளங்கும் ராமேசுவரம் ராமநாதசாமி கோவில் மிகவும் பழமை வாய்ந்த திருத்தலமாகும்.

இந்தியாவில் 12 ஜோதிர்லிங்கம் அமைந்துள்ள திருக்கோவில்களில் ராமேசுவரம் கோவிலும் ஒன்றாகும்.

காசியை நிகராக கருதப்படும் ராமேசுவரம் கோவிலும், அக்னி தீர்த்தக்கடல், தீர்த்தக்கிணறுகளும் பல சிறப்புகளையும், ஆன்மிக ஐதீகங்களையும் உள்ளடக்கியவை.

இதே போல் கோவிலின் மற்றொரு சிறப்பம்சம், ஒரே மாதிரியான தூண்களை கொண்ட 3-ம் பிரகாரம் ஆகும்.

இது கட்டிடக்கலைக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. 3-ம் பிரகாரத்தின் திருச்சுற்று 5.10 மீட்டர் அகல பாதையை உடையதாகும். இதில் 9 மீட்டர் உயரமான தூண்கள், உயரமான மேடை மீது அமைக்கப்பட்டுள்ளன. இந்த பிரகாரம் கோவிலில் உள்ள அனைத்து சன்னதிகள், மண்டபங்கள் மற்றும் தீர்த்தங்களை உள்ளடக்கிய ஒன்றாகும்.

3-ம் பிரகாரத்தின் தெற்கு பகுதி 207 மீட்டர் நீளமும், வடக்கு பகுதி 195 மீட்டர் நீளமும், கிழக்கு பகுதி 137 மீட்டர் நீளமும், மேற்கு பகுதி 119 மீட்டர் நீளமும் கொண்டது.

பிரகாரத்தில் மொத்தம் 1212 தூண்கள் ஒரே மாதிரியாக அமைக்கப்பட்டு இருப்பதுதான் இந்த பிரகாரத்தின் பிரதான சிறப்பு. இது சொக்கட்டான் மண்டபம் என்றும் அழைக்கப்படுகிறது.

3-ம் பிரகாரத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு தூணையும் மிக நுணுக்கமாக உருவாக்கி உள்ளனர். ஒவ்வொரு தூணும் பல பொருட்களின் கலவையாகவும், கட்டிடக் கலைக்கு எடுத்துக்காட்டாகவும் விளங்கி வருகிறது. இவ்வளவு வேலைப்பாடு அமைந்த தூண்களை பார்த்தால், யாருக்கும் வியப்பும் மலைப்பும் ஏற்படாமல் இருக்காது.

இந்த பிரகாரமானது ராமநாதபுரம் சீமையை ஆண்ட முத்துராமலிங்க சேதுபதி மன்னரால் கட்டப்பட்டது. 1740-ல் தொடங்கிய ராமேசுவரம் கோவிலின் 3-ம் பிரகாரத்தின் திருப்பணிகள் முழுமையாக 1770-ல் தான் முடிவடைந்து உள்ளன.

ராமேசுவரம் கோவிலில் உள்ள 3-ம் பிரகாரம் கட்டி முடிக்கப்பட்டு 250 ஆண்டுகளை தற்போது கடந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த 2016-ம் ஆண்டு ராமேசுவரம் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்ற போது, பிரசித்தி பெற்ற 3-ம் பிரகாரத்தில் உள்ள 1212 தூண்களிலும் புதிதாக வர்ணம் பூசப்பட்டது. லேசான மஞ்சள் நிறத்துடன் கூடிய வர்ணம் பூசப்பட்டு, பொலிவுடன் காட்சி அளித்து வருகிறது.

250-வது ஆண்டுகளை கடந்து, கம்பீரமாக ராமேசுவரம் கோவிலுக்கு பெருமை சேர்க்கும் இந்த 3-ம் பிரகாரத்தை பாரம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டும் அல்லது யுனெஸ்கோ அங்கீகாரம் அளித்து, அதற்குரிய பட்டியலில் இடம் பெறச் செய்ய வேண்டும் என்பதே ஒட்டுமொத்த சுற்றுலா பயணிகள், பக்தர்களின் விருப்பமாகும்.

இதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Tags:    

Similar News