லைஃப்ஸ்டைல்
கழுத்து வலிக்கு தலையணை மந்திரம்

கழுத்து வலிக்கு தலையணை மந்திரம்

Published On 2020-02-15 07:36 GMT   |   Update On 2020-02-15 07:36 GMT
நாம் தூங்கும் போது நம் கழுத்து தசைகளும், தோள் பட்டை தசைகளும் சீராக இயங்க தலைக்கு வைத்து இருக்கும் தலையணை முக்கிய பங்கு வகிக்கிறது.
சமீபகாலமாக கழுத்து வலியின் தாக்கம் மக்களிடையே அதிகரித்து வருவதை உணர முடிகிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், நாம் படுத்து உறங்கும் போது நம் கழுத்து தசைகளையும் தோள்பட்டை தசைகளையும் நேர்கோட்டில் வைத்து உறங்காமல் போவதுதான் முக்கியமான காரணம். படுத்துக் கொண்டே டிவி பார்ப்பது, படுத்துக் கொண்டே புத்தகம் படிப்பது, சோபாவில் படுத்தவாறு தொலைக்காட்சி நாடகங்கள் பார்ப்பது போன்ற பொதுவான காரணங்களால் இந்த கழுத்து வலியின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது.

சராசரியாக நாம் தினந்தோறும் ஆரோக்கியமாக வாழ ஆறு மணியிலிருந்து எட்டு மணி நேர உறக்கம் அவசியம் என்று மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எட்டு மணி நேரம் தூங்கும் போது நேர இடைவெளியில் தலையணைக்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவம் மிக மிக குறைவு. தலையணையை குறிப்பிட்ட கால வரையறைக்குள் நாம் யாருமே மாற்றுவது கிடையாது. அதாவது வெகு காலமாக ஒரே தலையணையை உபயோகிக்கிறோம்.

நாம் தூங்கும் போது நம் கழுத்து தசைகளும், தோள் பட்டை தசைகளும் சீராக இயங்க தலைக்கு வைத்து இருக்கும் தலையணை முக்கிய பங்கு வகிக்கிறது. நம்மில் பலரும் கழுத்து பிடிப்பால் வாழ்க்கையில் ஒருமுறையாவது பாதிக்கப்பட்டு இருப்போம். அதாவது தூங்கும் போது கழுத்தை கோணல் மாணலாக வைத்து இருந்தால், நரம்பு பிசகு ஏற்பட்டு மறு நாள் படுக்கையில் இருந்து எழுந்திருக்கும் போது கழுத்தை ஒரு பக்கமாக வைத்து நடக்க நேரிடும்.

காலம் காலமாக மாற்றாமல் நாம் உபயோகிக்கும் தலையணை நாட்கள் செல்லச் செல்ல இறுகி கற்களை போன்று கடினமாக மாறிவிடும். அதோடு மட்டுமில்லாமல், நம் தலைப்பகுதியின் எடைக்கு ஏற்பவும் நாம் உறங்கும் நிலைக்கு ஏற்ப குழிகள் ஏற்படுவதை கண்டு உணர முடியும். இந்த மாற்றங்கள் ஏற்பட நேரிடும் போது தலையணையை மாற்றும் காலம் வந்துவிட்டது என்பதை புரிந்து கொள்ளலாம். ஆனால் யாரும் அதை பொருட்படுத்துவதில்லை, நாட்கள் செல்லச் செல்ல கழுத்து தசைகள் கற்களைப் போன்ற தலையணையின் மீது வைத்து உறங்கும் போது கழுத்து தசைகள் கடினமாக நேரிடும். இதனால் கழுத்தை சுற்றியுள்ள தசைகளில் சிறுசிறு வலி ஏற்படும். பெரும்பாலும் படுக்கையில் தலையணையை பயன்படுத்தும் போது மிக உயரமாகவோ அல்லது மிகத் தாழ்வாகவோ இருக்கக்கூடாது.

குறைந்தது ஒரு வருடத்திற்கு ஒரு முறையாவது உபயோகிக்கும் தலையணையை மாற்றுவது அவசியமாகும். இதனால் கழுத்தில் ஏற்படும் தேய்மானத்தை தவிர்க்க முடியும். கழுத்து எலும்பு தேய்மானத்திற்கும், தலையணைக்கும் சம்பந்தம் இருக்கிறது. நாம் உறங்கும் தலையணையின் உயரம் அதிகமாகவோ அல்லது குறைவாக இருக்கும் போது சரியாக ஓய்வெடுக்க முடியாமல் போய்விடுகிறது.

தொடர்ச்சியாக தவறானமுறையில் தலையணையை பயன் படுத்தும் போது கழுத்தை சுற்றி உள்ள தசைகள் தனது இயக்க தன்மையை குறைத்துக்கொண்டு கடினமாக மாறிவிடும். இதனால் கழுத்தின் பின்பகுதி கழுத்தின் இரண்டு பக்கமும் உள்ள தோல் பகுதிகளில் மிகுந்த வலி உண்டாகும். இதனால் கை தசைகளிலும் வலியை ஏற்படுத்தும். இந்த வலியின் மூலக்கூறு பெரும்பாலும்தலையணையில் செய்யும் சிறு மாற்றமோ அல்லது படுக்கையில் மாற்றமோ கழுத்து வலியிலிருந்து பெருவாரியாக மீண்டு வர முடியும். இந்த மாற்றத்தோடு உங்கள் பிசியோதெரபி மருத்துவர் கூறும் உடற்பயிற்சிகளையும் அதாவது கழுத்துப் பயிற்சிகளையும் செய்துவர நன்றாக மாற்றத்தை உணரமுடியும்.

பொதுவாக படுக்கையில் ஓய்வு எடுக்கும் போது தலையணையை தலைக்கு மிக உயரமாக வைத்து படுக்க கூடாது, தாழ்வாகவும் வைத்து படுக்க கூடாது. உங்கள் இரண்டு கைகளையும் வணக்கம் கூறுவது போல கைகூப்பினால் எவ்வளவு உயரம் வருமோ அவ்வளவு உயரமே தலையணையின் உயரம் உங்கள் கழுத்துக்குப் போதுமானது. வருடத்திற்கு ஒருமுறை உங்களுடைய தலையணையை மாற்ற வேண்டும்.

தரமான இலவம்பஞ்சு போன்றவற்றால் செய்த தலையணைகள் உங்கள் கழுத்தை பதம் பார்க்காது. கழுத்துக்கும் தலைக்கும் இடையே உங்கள் கைகளை வைத்து உறங்குவதை முற்றிலும் தவிர்க்கவேண்டும். படுத்துக்கொண்டே உங்கள் செல்போனை பார்ப்பதை தவிர்க்கவும்.

உங்கள் கண்பார்வை வானத்தை நோக்கியவாறு தினமும் 15 நிமிடமாவது தலையணை இல்லாமல் நேராக படுக்கவும். இது உங்கள் கழுத்து தசைகளை இலகுவாக வேலை செய்ய உதவியாக இருக்கும். முடிந்தவரை வலப்பக்கமும், இடப்பக்கமும் திரும்பி படுக்கும்போது உங்கள் தலைப்பகுதி உடம்போடு நேர்க்கோட்டில் இருக்குமாறு படுத்துறங்க வேண்டும். கழுத்தை சுற்றியுள்ள தசைகள் மிக சிறிய தசைகள் என்பதால், எண்ணெய் கொண்டு நீவுதல் போன்ற முறைகளை முடிந்தவரை தவிர்த்துவிட வேண்டும்.

இது போன்ற சிறு சிறு நடவடிக்கைகள் கழுத்து வலியை குணமாக்கவும், மீண்டும் வருவதை தவிர்க்கவும் உதவியாக இருக்கும். தலையணை மந்திரம் உங்களுக்கு நல்ல தூக்கத்தை வரவழைக்கும்.

செந்தில்குமார் தியாகராஜன், தனியார் பிசியோதெரபி கல்லூரி, விரிவுரையாளர், குமாரபாளையம்
Tags:    

Similar News