இஸ்லாம்
இஸ்லாம் வழிபாடு

நற்பண்புகளை வளர்த்துக்கொள்வோம்...

Published On 2022-02-08 05:11 GMT   |   Update On 2022-02-08 05:11 GMT
ஒரு சமூகத்தில் ஏமாற்று, மோசடி, நம்பிக்கைத் துரோகம், வஞ்சனை என்று கெட்ட செயல்கள் குடிகொண்டிருந்தால் அந்த சமூகத்திற்கு இறைவனின் அருள் எவ்வாறு கிடைக்கும்?
ஒவ்வொரு மனிதர்களும் வணக்க வழிபாடுகளில் மட்டுமல்ல, நற்பண்புகளையும் பேண வேண்டும் என்பதையும் இஸ்லாம் வலியுறுத்துகிறது. இஸ்லாத்தின் சிறப்பே நற்குணம் தான்.

ஒரு முஸ்லிமிடம் இருக்க வேண்டிய குணநலன்களை இஸ்லாம் விரிவாக விவரிக்கிறது.

இத்தகைய குணங்கள் இருந்தாலே அவன் முஸ்லிம் என்று, நற்பண்புகளுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கிறது இஸ்லாம்.

தன்னுடைய வருகையின் நோக்கத்தைக் குறித்து நபிகள் நாயகம் குறிப்பிடும்போது இவ்வாறு கூறுகிறார்: ‘நற்குணங்களைப் பரிபூரணம் செய்வதற்காகவே நான் அனுப்பப்பட்டுள்ளேன்’ (மாலிக்).

ஒரு சமூகத்தில் ஏமாற்று, மோசடி, நம்பிக்கைத் துரோகம், வஞ்சனை என்று கெட்ட செயல்கள் குடிகொண்டிருந்தால் அந்த சமூகத்திற்கு இறைவனின் அருள் எவ்வாறு கிடைக்கும்?

அல்லது, ஒரே குடும்பத்தில் இருக்கும் உறுப்பினர்கள் ஒருவரோடு ஒருவர் வெறுப்புடனும், பொறாமையுடனும் நடந்து கொண்டால் அந்த குடும்பத்திற்கு அல்லாஹ்வின் அருள் எவ்வாறு கிடைக்கும்?

ஆக, இங்கே நாம் புரிந்துகொள்வது என்னவென்றால் ஆண்டவனின் அருளுக்கும் நற்குணங்களுக்கும் நெருங்கிய சம்பந்தம் உள்ளது என்பதே.

இஸ்லாம் கூறும் வணக்க வழிபாடுகளின் நோக்கமே நற்குணங்கள் தான் என்பதை அருள்மறை குர் ஆனைப் புரட்டினால் புரிந்துகொள்ளலாம்.

நோக்கங்களைச் சரியாக புரிந்து கொள்ளாவிடில் வணக்கங்கள் அனைத்தும் வெறும் உடற்பயிற்சிகளாகவே மாறிவிடும்.

‘நற்குணங்களில் பலவீனமாக இருப்பவன் இறை நம்பிக்கையிலும் (ஈமான்) பலவீனமானவனாகவே இருப்பான்’ என்று இஸ்லாம் கூறுகின்றது.

நபிகள் நாயகம் கூறினார்கள்: ‘இறைவன் மீது ஆணை! அவன் இறை நம்பிக்கையாளன் அல்ல, இறைவன் மீது ஆணை! அவன் இறை நம்பிக்கையாளன் அல்ல, இறைவன் மீது ஆணை! அவன் இறை நம்பிக்கையாளன் அல்ல!’.

மூன்று தடவை இவ்வாறு இறைவனின் தூதர் கூறவும் நபித்தோழர்கள் கேட்டனர்: ‘அல்லாஹ்வின் தூதரே! யாரைக் குறித்து இவ்வாறு கூறுகின்றீர்கள்?’.

அதற்கு அண்ணலார் கூறினார்: ‘எவனுடைய தீங்கிலிருந்து அண்டை வீட்டார் பாதுகாப்பு பெறவில்லையோ அவன்’. (முஸ்லிம், அஹ்மத்)

மேலும், நபிகள் நாயகம் கூறினார்கள்: ‘வெட்கமும் இறை நம்பிக்கையும் இரண்டு கொம்புகள். ஒன்று போனால் மற்றொன்றும் போய்விடும்’. (தபரானி, ஹாகிம்)

முழுமையாக இறை நம்பிக்கை கொண்ட ஒருவர், ஒருநாளும் வெட்கம் கெட்ட செயலை செய்ய மாட்டார் என்பதையே அண்ணல் நபி இங்கே சுட்டிக்காட்டுகிறார்கள்.

நற்குணங்களைப் பேணுபவனுக்கு இவ்வுலகிலும் நன்மை, மறுமையிலும் நன்மையே. இதன் சிறப்புக்களைக் குறித்து நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘மறுமையில் நன்மை தீமை நிறுக்கப்படும் தராசில் அதிக கனம் தருவது நற்குணங்களே’. (அபூதாவூத், திர்மதி)

‘நற்குணங்களில் பரிபூரணம் பெற்றவரே இறை நம்பிக்கையில் பரிபூரணம் பெற்றவராவார்’. (அபூதாவூத், அஹ்மத்)

‘நான் அதிகம் நேசிப்பவரும், என்னோடு மறுமை நாளில் மிக நெருக்கமாக இருப்பவரும் யார் எனில், சிறந்த நற்குணங்கள் கொண்டவரே!’. (திர்மதி, அஹ்மத்)

‘சுவனத்தில் மனிதன் அதிகம் நுழைவதற்குக் காரணமாக அமைவது இறையச்சமும், நற்குணமும் தான்’ (திர்மதி, இப்னு மாஜா)

‘இரவெல்லாம் நின்று வணங்கி, பகலெல்லாம் நோன்பு நோற்பவனுக்கு கிடைக்கும் பாக்கியத்தைவிட நற்குணத்தால் சிறந்தவனுக்கு அதிக பாக்கியம் கிடைக்கும்’. (அபூதாவூத், அஹ்மத்).

இம்மையிலும், மறுமையிலும் பல்வேறு நன்மைகள் தரும் நற்குணத்தில் சிறந்துவிளங்கி இறைவனின் அருளை நாம் அனைவரும் பெறுவோம், ஆமீன்.

குளச்சல் நூஹ் மஹ்ழரி.
Tags:    

Similar News