புதுக்கடையில் நர்சிங் கல்லூரி மாணவி மாயம்
நாகர்கோவில்:
புதுக்கடை கீழ்குளம் செந்தறை பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் குமார். வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.
சுரேஷ் குமாரின் மனைவி சரண்யா (வயது 21). திருமணம் முடிந்த பின்பும், சரண்யா, நர்சிங் கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
தினமும் கல்லூரிக்கு பஸ்சில் சென்று விட்டு மாலையில் வீடு திரும்பி விடுவார். தற்போது கல்லூரிக்கு விடுமுறை என்பதால் , சரண்யா வீட்டில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் சரண்யாவின் கணவரும் வெளிநாட்டில் இருந்து விடுமுறையில் வீட்டுக்கு வந்திருந்தார். நேற்று சரண்யாவின் கணவர், அருகில் உள்ள கோவிலுக்கு சென்றார்.
வீட்டில் சரண்யா மட்டும் தனியாக இருந்தார். கோவிலுக்கு சென்ற சுரேஷ் குமார் மாலையில் வீடு திரும்பினார். வீட்டில் சரண்யாவை காணவில்லை. அதிர்ச்சி அடைந்த அவர் அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தார். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதையடுத்து சுரேஷ் குமார் புதுக்கடை போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ராஜேஷ்வரி, சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ ஆகியோர் வழக்குபதிவு செய்து மாயமான நர்சிங் மாணவியை தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.