செய்திகள்
சேலத்தில் திருமணமான 11 மாதத்தில் தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை
சேலத்தில் திருமணமான 11 மாதத்தில் தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.
சேலம்:
ஈரோட்டை சேர்ந்தவர் சதீஷ் (வயது 28). எம்.சி.ஏ. முடித்துள்ளார். இவருக்கும் சேலம் வீராணம் அருகே உள்ள டி.பெருமாபாளையம் பகுதியை சேர்ந்த ரவீனா என்ற பட்டதாரி பெண்ணுக்கும் கடந்த 11 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. முதலில் இருவரும் ஈரோட்டில் குடியிருந்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 7 மாதத்துக்கு முன்பு இருவரும் டி.பெருமாபாளையம் பகுதியில் குடியேறி தனியாக வசித்து வந்தனர்.
சதீஷ் சேலத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் சதீஷ், ரவீனா இருவரும் பேளூர் அருகே உள்ள உறவினர் ஒருவருடைய திருமணத்துக்கு சென்று வந்தாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று காலை சதீஷ் தனது அறையில் தூக்கில் பிணமாக தொங்கினார். இதை பார்த்து உறவினர்கள் அதிர்ச்சி அடைந்ததுடன் கதறி அழுதனர்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் வீராணம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், குடும்ப பிரச்சினையில் சதீஷ் தற்கொலை செய்திருக்கலாம் என்பது தெரியவந்தது. இருந்தாலும் சதீசின் பெற்றோர் வீராணம் போலீஸ் நிலையத்தில் தனது மகன் சாவில் மர்மம் இருப்பதாக கூறி உள்ளனர். இதனால் அதன் அடிப்படையிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.