ஆன்மிகம்
வடமாத்தூர் காஞ்சி கரைகண்டேஸ்வரர் கோவில்

வடமாத்தூர் காஞ்சி கரைகண்டேஸ்வரர் கோவில்

Published On 2019-08-30 01:42 GMT   |   Update On 2019-08-30 01:42 GMT
வடமாத்தூரில் இருந்து 7 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது காஞ்சி கரைகண்டேஸ்வரர் ஆலயம். இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
ஜவ்வாதுமலையில் தோன்றி திருவண்ணாமலை மாவட்டத்தில் பாய்ந்து வளம் சேர்ப்பது, சேயாறு ஆகும். இது பாலாற்றின் துணை ஆறாக விளங்குகின்றது. இதற்கு புராணக்கதை உண்டு. முருகப்பெருமான் தன் அன்னை பார்வதிக்காக நீரூற்று ஒன்றை உருவாக்கினார். அவர் அம்பெய்தி வந்த நீரூற்று ஆறாக பெருக்கெடுத்தது. அந்த வெள்ளப் பெருக்கில் ஏழு ரிஷிகள் மாண்டு போனார்கள். அந்த தோஷம் நீங்கிட சேயாற்றின் கரையோரம் ஏழு சிவாலயங்களை நிறுவி வழிபட்டுவந்த முருகன், தன் தோஷம் நீங்கப்பெற்றார். அதன் முதல் தலம், வடமாத்தூரில் இருந்து 7 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள காஞ்சி கரைகண்டேஸ்வரர் ஆலயமாகும்.

வடமாத்தூர் திருத்தலமானது, திருவண்ணாமலையில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக் கிறது. இங்கு மாணிக்க விநாயகர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலித்து வருகிறார்.

தலவரலாறு :

சுமார் ஐந்து தலைமுறைகளுக்கு முன்பு இவ்வூரில் வாழ்ந்த, சீதாராமன் என்ற அடியாருக்கு, தனது ஊரில் வழிபட ஏதும் ஆலயம் இல்லையே என்ற குறை இருந்தது. அதனால் நெடுந்தொலைவில் இருந்து ஒரு விநாயகர் சிலையை எடுத்து வந்து, தன் வீட்டின் அருகே வைத்திருந்தார். அவரையே மூலவராக்கி ஆலயம் எழுப்பவும் முடிவு செய்திருந்தார். ஆனால், அன்று இரவு அவருக்கு கனவு தோன்றியது. அதில் விநாயகப் பெருமானே காட்சி தந்து, “உன் ஊரிலேயே பல நூறு ஆண்டு களாக நான் மண்ணில் மறைந்திருக்கிறேன். என்னை எடுத்து நீ ஆலயம் எழுப்பு. அதில் நான் வெளிப்படுவேன். நான் இருக்குமிடம் நீ ஏர் உழும்போது வெளிப்படும்” என்று கூறி, தான் இருக்கும் அமைவிடத்தைக் காட்டி மறைந்தார்.

கனவு கலைந்து எழுந்த சீதாராமன், விடிந்ததும் ஏர் கலப்பையை எடுத்துக் கொண்டு, வயலுக்குச் சென்றார். அங்கு மாடுகளைப் பூட்டி வயலை உழுதார். நெடுநேரம் உழுதும் ஏதும் தென்படவில்லை. என்றாலும், மனம் தளராமல் உழுதுகொண்டே வந்தார். அப்போது ஏர் கலப்பையை மூன்று கருங்கற்கள் தடுத்து நிறுத்தின. அதைத் தோண்டி எடுத்த போது, அவற்றில் இரண்டு உருண்டை வடிவிலும், மற்றொன்று சிறிய மூஞ்சூறு வடிவிலும் காட்சி தந்தன. இதனால் மனம் மகிழ்ந்த அடியார், அதனை தன் இல்லத்திற்குக் கொண்டு வந்தார். அவருக்கு மீண்டும் குழப்பம். ‘உருவமற்ற இதில் எதை விநாயகராக பாவிப்பது?’ என்ற சிந்தனையிலேயே அன்றிரவு கண் அயர்ந்தார்.

அன்று இரவும் விநாயகப்பெருமான், அவர் கனவில் தோன்றி, “உன் விருப்பப் படியே ஏதேனும் ஒரு கல்லை மூலவராக்கிக் கொள். அதில் இருந்து நான் என் உருவத்தை வெளிப்படுத்துவேன்” என்று கூறி மறைந்தார்.

மறுநாள் தன் வீட்டின் அருகே கிழக்கு நோக்கியவாறு தனக்குப் பிடித்த அந்த உருண்டைக் கல்லையும், அதன் எதிரே சிறிய மூஞ்சூறு கல்லையும் நிறுவினார். மற்றொரு கல்லைத் தனியே ஆலயத்திற்குள் வைத்திருந்தார். காலச் சக்கரத்தில் அந்த உருண்டைக் கல்லில் இருந்து விநாயகரின் உருவம் வெளிப்படத் தொடங்கியது. அது முதல் அடியார் மட்டுமே வழிபட்டு வந்த இந்த விநாயகர், அப்பகுதி மக்கள் மனதிலும் இடம் பிடித்தார். அத்துடன் வேண்டிய வரங்களையும் அள்ளித் தரும் வள்ளலாகவும் அவர் விளங்கத் தொடங்கினார். இவரே மாணிக்க விநாயகர். இவரை மையமாக வைத்தே மதுரநாதீஸ்வரர், மரகதாம்பிகை, வள்ளி- தெய்வானை சமேத முருகன் சன்னிதி என அனைத்தும் உள்ளடக்கிய பெரிய ஆலயம் எழுப்பப்பட்டிருக்கிறது.

ஆலய அமைப்பு

கிழக்கு நோக்கிய ஆலயம், எளிய நுழைவு வாசலைக் கொண்டு விளங்குகிறது. வாசலின் மேற்பகுதியில் விநாயகர், சிவபெருமான், முருகன் என சுதை வடிவங்கள் அழகுறக் காட்சி தருகின்றன. உள்ளே நுழைந்ததும், கொடிமரம், பலிபீடம், நந்திதேவர் காட்சி தர, நாம் மேலும் உள்ளே நுழைகிறோம். கருங்கல் கூரை கொண்ட கருவறை முன்மண்டபத்தை அடுத்து, இடதுபுறம் எளிய வடிவில், அழகுறக் காட்சி தருபவர் சுயம்பு மூர்த்தியான மாணிக்க விநாயகர். இவரே கல்லில் இருந்து பொலியாமல் தன் உருவத்தை மெல்ல மெல்ல வெளிப்படுத்தி, இன்று சுயம்பு மூர்த்தி விநாயகராக அருள் வழங்குகிறார். இவருக்கு வலதுபுறம், வள்ளி- தெய்வானை சமேத முருகப்பெருமான் எளிய வடிவில் அருளாசி வழங்குகிறார்.

ஆலயத்தின் நடு நாயகமாக இறைவன் மதுரநாதீஸ்வரர் புதுப்பொலிவோடு கிழக்கு முகமாய் வாசலை நோக்கி காட்சி தருகிறார். கருவறை சுற்றில் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், விஷ்ணு துர்க்கை, கஜலட்சுமி, சண்டிகேசுவரர் ஆகியோரது சிலா வடிவங்கள் உள்ளன. அன்னை மரகதாம்பிகை சன்னிதி கி.பி. 1921-ல் கட்டப்பட்டு, தற்போது புதுப்பிக்கப்பட்டுள்ளது.

அன்னை மரகதாம்பிகை நின்ற கோலத்தில் எளிய வடிவுடன் அருளாசி வழங்குகிறார். உற்சவமூர்த்திகள் காப்பறை, அம்மன் சன்னிதியின் இடதுபக்கமாக இருக்கிறது. மாணிக்க விநாயகர், வள்ளி- தெய்வானை சமேத முருகப்பெருமான், சோமாஸ்கந்தர், பிரதோஷ நாயகர், மரகதாம்பிகை என உற்சவர் திருமேனிகள் அழகுற அமைந்துள்ளன. ஈசான்ய மூலையில் நவக்கிரக சன்னிதியும், அதன் அருகே மேற்கு பார்த்த கால பைரவர் சன்னிதியும் காட்சி தருகின்றன.

தொடர்ச்சியாக மூன்று சதுர்த்தி தினங்களில் இந்த ஆலயம் வந்து, மாணிக்க விநாயகரை வழிபட்டுச் சென்றால், அனைத்து விதமான கிரக தோஷங்களும் அகலும் என்கிறார்கள். திரு மணத்தடை நீங்கவும், கணவன் - மனைவி பிணக்கு தீரவும், தாலி பாக்கியம் நிலைத்திடவும் இத்தலம் சிறந்த பரிகாரத் தலமாக விளங்குகிறது. இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் 9.30 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும்.

அமைவிடம் :

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டத்தில் அமைந்துள்ளது வடமாத்தூர். சென்னை தென்மேற்கே 210 கி.மீ, போளூருக்கு தெற்கே 43 கி.மீ, செங்கத்திற்கு கிழக்கே 24 கி.மீ, திருவண்ணாமலைக்கு மேற்கே 15 கி.மீ தொலைவில் வடமாத்தூர் திருத்தலம் இருக்கிறது. திருவண்ணாமலை - காஞ்சி (காஞ்சிபுரம் அல்ல) பேருந்து வழித்தடத்தில் பெரியகுளம் பஸ் நிறுத்தத்தில் இறங்க வேண்டும். அங்கிருந்து தெற்கே 2 கி.மீ. பயணம் செய்தால் வடமாத்தூரை அடையலாம்.

பனையபுரம் அதியமான்
Tags:    

Similar News