செய்திகள்
சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது
கோவையில் ஆசைவார்த்தை கூறி சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
துடியலூர்:
கோவை கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தர்மராஜ் (வயது 22). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டது. தர்மராஜ், சிறுமியை கடந்த 3 மாதமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 17-ந் தேதி வெளியில் சென்ற சிறுமி வீடு திரும்பவில்லை. பெற்றோர் அவரை பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் துடியலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதற்கிடையில், சம்பவத்தன்று மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள ஊட்டி பஸ் நிலையத்தில் தர்மராஜ் சிறுமியுடன் நின்று கொண்டிருந்தார். இதைப்பார்த்த சிறுமியின் தந்தை உடனடியாக 2 பேரையும் பிடித்து துடியலூர் அனைத்து மகளிர் போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் தர்மராஜ் மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று திருமணம் செய்ததும், சிறுமி தற்போது 3 மாதம் கர்ப்பமாக இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் தர்மராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.