செய்திகள்
கோப்புப்படம்

ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்தால் கைது நடவடிக்கை- கூடுதல் டி.ஜி.பி. ரவி எச்சரிக்கை

Published On 2019-12-04 09:00 GMT   |   Update On 2019-12-04 09:00 GMT
குழந்தைகளின் ஆபாச படங்களை பார்ப்பவர்கள், பதிவிறக்கம் செய்பவர்கள் மீது கைது நடவடிக்கை தொடங்கும் என்று கூடுதல் டி.ஜி.பி. ரவி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை:

செல்போனில் ஆபாச படங்களை பார்ப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

செல்போன்களில் இணையதளத்தில் சென்று ஆபாச வீடியோக்களை பதிவிறக்கம் செய்து பார்ப்பவர்கள் அதனை மற்றவர்களுக்கும் அனுப்பி வருகிறார்கள்.

இன்றைய இளைஞர்கள் மத்தியில் ஆபாச வீடியோக்களை செல்போனில் பார்ப்பது பொழுதுபோக்காகவே மாறிவிட்டது.

ஆபாச படங்களை பார்ப்பவர்களின் பட்டியலில் சென்னை முதலிடத்தில் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

இதுதொடர்பாக அமெரிக்காவைச் சேர்ந்த புலனாய்வுத்துறை மத்திய உள்துறைக்கு தகவல் அனுப்பி உள்ளது. இந்த தகவலை மத்திய அரசு தமிழக போலீசுக்கு தெரிவித்து உள்ளது.

இதன்படி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கி உள்ளனர்.

இதுதொடர்பாக இந்த பிரிவின் கூடுதல் டி.ஜி.பி. ரவி கூறியதாவது:-

குழந்தைகளின் ஆபாச படங்களை பார்ப்பவர்கள் பதிவிறக்கம் செய்பவர்கள், ஆகியோர்களின் செல்போன் மற்றும் கம்ப்யூட்டர் ஐ.பி. முகவரியை மத்திய அரசு எங்களுக்கு அனுப்பி உள்ளது. அந்த முகவரிகளில் உள்ள நபர்களின் முழு தகவல்களையும் செல்போன் நிறுவனங்கள் மூலமாக திரட்டி வருகிறோம். விரைவில் கைது நடவடிக்கை தொடங்கும்.

குழந்தைகளின் ஆபாச படங்களை பதவிறக்கம் செய்வதும் அதனை மற்றவர்களுக்கு அனுப்புவதும் குற்றமாகும். இந்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் 3 ஆண்டில் இருந்து 7 ஆண்டு வரை சிறை தண்டனை கிடைக்கும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதுதொடர்பான தகவல்கள் சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது. போலீஸ் அதிகாரி ரவியின் வீடியோ பேட்டி, பேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட வலைதளங்களிலும் பரவி உள்ளது. இது செல்போனில் ஆபாச படங்களை பதவிறக்கம் செய்பவர்கள் மற்றும் பரப்புவோர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News