செய்திகள்

டெல்லியில் 23ந் தேதி கூட்டம் - சோனியா அழைப்பை ஏற்க சந்திரசேகரராவ் தயக்கம்

Published On 2019-05-16 09:15 GMT   |   Update On 2019-05-16 09:15 GMT
டெல்லியில் நடைபெறவுள்ள ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க எதிர்க்கட்சி தலைவர்களை சோனியா அழைத்துள்ள நிலையில், சந்திரசேகர ராவ் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு காங்கிரசுடன் பேச்சு நடத்தலாம் என்று தெரிகிறது.
புதுடெல்லி:

பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் 23-ந் தேதி வெளிவர உள்ளன. அன்று எதிர்க்கட்சி தலைவர்கள் அனைவரையும் டெல்லிக்கு வருமாறு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா அழைத்துள்ளார்.

இதற்காக அவர் காங்கிரஸ் கூட்டணியில் உள்ள கட்சிகளின் தலைவர்களுக்கும், பா.ஜனதாவை எதிர்த்து செயல்படும் மாநில கட்சிகளின் தலைவர்களுக்கும் கடிதம் அனுப்பி உள்ளார்.

சோனியா அனுப்பிய கடிதம் இன்று மாநில கட்சிகளின் தலைவர்களுக்கு சென்று சேர்ந்தது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு இன்று கடிதம் வந்தது.

இதைத்தொடர்ந்து டெல்லியில் 23-ந் தேதி காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சியினர் பிரமாண்ட ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் முடிவுகளை தெரிந்துகொண்டு பா.ஜனதா ஆட்சிக்கு வருவதை தடுக்க அதிரடியாக செயல்படுவது என்று அந்த கூட்டம் மூலம் ஏற்பாடு நடந்து வருகிறது.

23-ந் தேதி கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி தலைவர் சந்திரசேகர ராவ், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, பிஜூ ஜனதாதள தலைவர் நவீன் பட்நாயக் ஆகியோருக்கும் சோனியா கடிதம் எழுதியுள்ளார். ஆனாலும் இந்த 3 பேரும் 23-ந் தேதி டெல்லி கூட்டத்தில் பங்கேற்பார்களா என்று சந்தேகம் எழுந்துள்ளது.

குறிப்பாக சந்திரசேகர ராவும், ஜெகன்மோகன் ரெட்டியும் தேர்தல் முடிவுகளை தெரிந்துகொண்ட பிறகே காங்கிரஸ் கட்சியுடன் பேச்சு நடத்தலாம் என்று கூறி இருப்பதாக தெரிகிறது. அவர்களது தயக்கம் காரணமாக 23-ந் தேதி கூட்டம் முழுமையான எதிர்கட்சிகளை கொண்டதாக இருக்குமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.

Tags:    

Similar News