செய்திகள்
பூண்டி ஏரி

20 நாட்களில் பூண்டி ஏரி நீர்மட்டம் 13 அடி உயர்வு

Published On 2019-10-09 07:01 GMT   |   Update On 2019-10-09 07:01 GMT
மழைநீர் மற்றும் கிருஷ்ணா நதி நீர் வரத்தால் பூண்டி ஏரி நீர்மட்டம் கடந்த 20 நாட்களில் 13 அடி உயர்ந்துள்ளது.

ஊத்துக்கோட்டை:

கடந்த ஆண்டு பருவ மழை பொய்த்ததால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகளில் நீர்மட்டம் அடியோடு சரிந்தது.

சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விடும்படி அமைச்சர்கள் ஜெயகுமார், வேலுமணி ஆகியோர் ஆந்திர முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டியை சந்தித்து கோரிக்கை வைத்தனர்.

இதற்கிடையே கடந்த 18-ந் தேதி பூண்டி ஏரி நீர்ப்பிடிப்பு பகுதி மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் எதிர்பாராத விதமாக பலத்த மழை கொட்டி தீர்ந்தது. இதனால் பள்ளிப்பட்டு அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தில் உள்ள அணை நிரம்பியது.

இதைத்தொடர்ந்து கிருஷ்ணாபுரம் அணையில் இருந்து கொசஸ்தலை ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் பூண்டி ஏரிக்கு நீர் வரத்து அதிகமானது. இதனால் ஏரியின் நீர்மட்டம் உயரத் தொடங்கியது.

கடந்த 18-ந் தேதி 12.55 அடியாக இருந்த நீர்மட்டம் 25-ந் தேதி 20.25 அடியாக உயர்ந்தது. இந்த நிலையில் தமிழக அமைச்சர்களின் கோரிக்கையை ஏற்று கடந்த 25-ந் தேதி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த நீர் பூண்டி ஏரிக்கு 28-ந் தேதி வந்தடைந்தது.

கண்டலேறு அணையில் முதலில் 100 கனஅடியாக திறக்கப்பட்ட தண்ணீர் பின்னர் படிப்படியாக அதிகரிக்கப்பட்டது. அதிகபட்சமாக வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடியாக திறக்கப்பட்டது.

இந்த தண்ணீர் பூண்டி ஏரிக்கு சராசரியாக வினாடிக்கு 800 கனஅடி வீதம்வந்து கொண்டிருக்கிறது. மழை நீர் மற்றும் கிருஷ்ணா நீர் வரத்தால் பூண்டி ஏரியின் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.


இதனையடுத்து சென்னை குடிநீர் தேவைக்காக பூண்டி ஏரியில் இருந்து பேபி கால்வாயில் சென்னை குடிநீர் வாரியத்துக்கு கடந்த 6-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.

கிருஷ்ணா தண்ணீர் வரத்து காரணமாக நேற்று முதல் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரெயிலில் தண்ணீர் கொண்டு வருவது நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கடந்த மாதம் 18-ந் தேதி 12.55 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 25.55 அடியாக பதிவானது. மழைநீர் மற்றும் கிருஷ்ணா நதி நீர் வரத்தால் பூண்டி ஏரி நீர்மட்டம் கடந்த 20 நாட்களில் 13 அடி உயர்ந்துள்ளது.

பூண்டி ஏரி உயரம் 35 அடியாகும். 3231 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். இன்று காலை 6 மணி நிலவரப்படி ஏரியின் நீர் மட்டம் 25.55 அடியாக பதிவாகியது. 938 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு வினாடிக்கு 584 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

Tags:    

Similar News