செய்திகள்

மம்தா புகைப்படத்தை வெளியிட்டதற்காக மன்னிப்பு கேட்க மாட்டேன் - பாஜக பெண் பொறுப்பாளர் திட்டவட்டம்

Published On 2019-05-15 09:31 GMT   |   Update On 2019-05-15 09:31 GMT
மேற்கு வங்காளத்தின் முதல் மந்திரி மம்தாவின் மார்பிங் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்ததாக கைதான பாஜக இளைஞரணி பெண் பொறுப்பாளர் பிரியங்கா சர்மா, மம்தா புகைப்படத்தை வெளியிட்டதற்காக மன்னிப்பு கேட்க மாட்டேன் என திட்டவட்டமாக கூறியுள்ளார்.
கொல்கத்தா:

மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரியும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜியை மிகவும் விகாரமாக சித்தரித்து சில நாட்களாக பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்அப் உள்ளிட்ட  சமூக வலைத்தளத்தில் ஒரு புகைப்படம் வைரலாக பரவியது.
 
இந்த புகைப்படத்தை பகிர்ந்ததாக பாஜக இளைஞரணியான யுவ மோர்ச்சாவை சேர்ந்த ஹவுரா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரியங்கா சர்மா என்ற பெண்ணை தாஸ்நகர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் 14 நாள் நீதிமன்ற காவலில் அடைத்து வைக்கப்பட்டார்.



இதற்கிடையே, பிரியங்கா சர்மாவை ஜாமினில் விடுதலை செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் அவரது வழக்கறிஞர் என்.கே.கவுல் தாக்கல் செய்தார். பிரியங்கா கைது செய்யப்பட்டு 5 நாட்கள் ஆன நிலையில், மன்னிப்பு கடிதம் ஒன்றை எழுதிக் கொடுத்துவிட்டு பிரியங்கா செல்லலாம் என சுப்ரீம் கோர்ட் கூறியது.

இந்நிலையில் இன்று பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த பிரியங்கா,  ‘நான் மம்தா புகைப்படத்தை வெளியிட்டதற்காக மன்னிப்பு கேட்க மாட்டேன். சிறையில் இருந்தபோது போலீசார் என்னை கொடுமைப்படுத்தினர். சிறை காவலாளி நேற்று என்னை தள்ளிவிட்டார். 

நான் குற்றவாளி அல்ல, என்னை இவ்வாறு நடத்துவது முறை அல்ல என அவரிடம் கூறினேன். இருப்பினும் என்னை சரியாக நடத்தவில்லை. சிறைக்குள் நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. இதனால் நான் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானேன்’ என கூறினார். 
Tags:    

Similar News