உள்ளூர் செய்திகள்
வாலிபர் கொலையில் 2 பேர்கைது

கடையம் வாலிபர் கொலையில் 2 பேர் கைது

Published On 2022-01-13 09:09 GMT   |   Update On 2022-01-13 09:09 GMT
கடையம் அருகே உள்ள மயிலப்பபுரத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவரை கோவில் கொடைவிழாவில் ஏற்பட்ட தகராறு காரணமாக கொலை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடையம்:

கடையம் அருகே உள்ள மயிலப்பபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் முத்து. இவரது மகன் மணிகண்டன்(வயது 23). செங்கல் சூளை தொழிலாளி.

அதே பகுதியை சேர்ந்தவர்கள் இவரது நண்பர்கள் துரை(23), சாம் பிளசன்(19). இவர்களுக்கும், மணிகண்டனுக்கும் இடையே ஏற்கனவே முன் விரோதம் இருந்து வந்தது.

நேற்று முன்தினம் இரவில் அந்த பகுதியில் உள்ள அவ்வையார் கோவில் திருவிழாவின்போது இவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் துரை, சாம்பிளசன் ஆகியோர் சேர்ந்து கத்தியால் மணிகண்டனை குத்திக்கொலை செய்தனர்.

இதுகுறித்து கடையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து துரை, சாம்பிளசன் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் துரை கூறியதாவது:-

கோவில் கொடை விழாவுக்கு எனது நண்பர் சாம் பிளசன் சென்றிருந்தார். அவரை அங்கு நின்று கொண்டிருந்த மணிகண்டன் சட்டையை பிடித்து இழுத்து நீ எப்படி இங்கு வரலாம் என்று கூறி தகராறு செய்தார்.

இதில் அவர்களுக்குள் கைகலப்பு ஏற்பட்டது. உடனே அங்கிருந்தவர்கள் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சாம்பிளசன் என்னிடம் தெரிவித்தார். 

இதனால் ஆத்திரம் அடைந்த நான் அவரை அழைத்துக்கொண்டு கத்தியுடன் சென்றேன். நள்ளிரவு 2 மணிக்கு மணிகண்டன் அவரது வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தார். அங்கு சென்று அவரிடம் தட்டிக்கேட்டேன். 

அப்போது எங்களுக்குள் வாக்குவாதம் எழுந்தது. ஆத்திரம் அடைந்த நாங்கள் 2 பேரும் கத்தியால் மணிகண்டன் மார்பில் குத்தி கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டோம்.

இவ்வாறு அவர் கூறினார். இதையடுத்து 2 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

Tags:    

Similar News