ஆன்மிகம்
குற்றாலம் குற்றாலநாதர் சுவாமி கோவிலில் சித்திரை தேரோட்டம் நேற்று நடந்தபோது எடுத்த படம்.

குற்றாலநாதர் சுவாமி கோவிலில் சித்திரை தேரோட்டம்

Published On 2021-04-10 03:04 GMT   |   Update On 2021-04-10 03:04 GMT
குற்றாலம் குற்றாலநாதர் சுவாமி கோவிலில் சித்திரை தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை விசு திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான விழா கடந்த 5-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் சிறப்பு பூஜைகள், சுவாமி அம்பாள் வீதி உலா நடைபெற்று வருகிறது.

விழாவின் 5-ம் நாளான நேற்று காலை தேரோட்டம் நடந்தது. முதலில் விநாயகர் தேரையும், அதைத்தொடர்ந்து முருகன் தேரையும் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். தொடர்ந்து குழல்வாய்மொழி அம்மை தேரும், நடராஜர் தேரும் வடம்பிடித்து இழுக்கப்பட்டன. தேரோட்டம் காலை 8-30 மணிக்கு தொடங்கி 11-30 மணிக்கு முடிவடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடராஜ மூர்த்திக்கு தாண்டவ தீபாராதனை நடக்கிறது. 12-ந்தேதி சித்திர சபையில் நடைபெற இருந்த சிறப்பு அபிஷேகம், பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை ஆகியவை கொரோனா கட்டுப்பாடு காரணமாக ரத்து செய்யப்பட்டு உள்ளது. சுவாமி- அம்பாள் வீதி உலாவும் நிறுத்தப்பட்டு இருக்கிறது. கோவிலுக்குள் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளும் நடைபெறும் என கோவில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை தூத்துக்குடி இணை ஆணையர் அன்புமணி, தக்கார் சங்கர், கோவில் நிர்வாக அதிகாரி கண்ணதாசன் ஆகியோர் செய்து வருகிறார்கள்.
Tags:    

Similar News