செய்திகள்
சையத் முஷ்டாக் அலி டிராபி

சையத் முஷ்டாக் அலி டிராபி: கேரளாவை வீழ்த்தியது தமிழ்நாடு

Published On 2019-11-08 15:44 GMT   |   Update On 2019-11-08 15:44 GMT
இந்தியாவின் முன்னணி உள்ளூர் தொடரான சையத் முஷ்டாக் அலி டிராபியில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் கேரளாவை வீழ்த்தியது தமிழ்நாடு.
இந்தியாவில் நடைபெறும் முன்னணி டி20 கிரிக்கெட் தொடரான சையத் முஷ்டாக் அலி டிராபி கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியது. தும்பாவில் நடைபெற்ற ஆட்டத்தில் தமிழ்நாடு - கேரளா அணிகள் மோதின. கேரளா டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி தமிழ்நாடு அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக முரளி விஜய், ஜெகதீசன் ஆகியோர் களம் இறங்கினர். ஜெகதீசன் 8 ரன்னிலும், முரளி விஜய் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

அதன்பின் வந்த அபரஜித் 35 ரன்களும், தினேஷ் கார்த்திக் 33 ரன்களும், விஜய் சங்கர் 25 ரன்களும், ஷாருக் கான் 28 ரன்களும், முகமது 11 பந்தில் 34 ரன்களும் அடிக்க தமிழ்நாடு 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் குவித்தது.

பின்னர் 175 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் கேரளா அணி களம் இறங்கியது. டி. நடராஜன், பெரியசாமி தலா மூன்று விக்கெட்டுக்கள் வீழ்த்த கேரளா அணியால் 137 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் தமிழ்நாடு 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Tags:    

Similar News