செய்திகள்
ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையில் இருந்து வீணாக கடலுக்கு செல்லும் தண்ணீர்
தாமிரபரணி ஆற்றின் கடைசி தடுப்பணையான ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையை தாண்டி விழுந்து வினாடிக்கு 6 ஆயிரத்து 600 கன அடி தண்ணீர் ஆர்ப்பரித்து வீணாக கடலுக்கு செல்கிறது.
ஸ்ரீவைகுண்டம்:
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பெய்த பலத்த மழை காரணமாக, பாபநாசம், மணிமுத்தாறு உள்ளிட்ட அணைகள் நிரம்பியதால், உபரிநீர் தாமிபரணி ஆற்றில் திறந்து விடப்பட்டு உள்ளது. இதனால் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றின் முதல் தடுப்பணையான மருதூர் அணையை தாண்டி விழுந்து தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. மேலும் மருதூர் மேலக்கால் வழியாக 440 கன அடி தண்ணீரும், கீழக்கால் வழியாக 320 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டு உள்ளது.
அதேபோன்று தாமிரபரணி ஆற்றின் கடைசி தடுப்பணையான ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையை தாண்டி விழுந்து வினாடிக்கு 6 ஆயிரத்து 600 கன அடி தண்ணீர் ஆர்ப்பரித்து வீணாக கடலுக்கு செல்கிறது.
ஸ்ரீவைகுண்டம் வடகால், தென்கால் பாசன குளங்கள் பெரும்பாலும் நிரம்பியதால், அந்த கால்வாய்களில் தண்ணீர் திறந்து விடப்படவில்லை.