செய்திகள்
கைது

கடலூரில் டிரைவரை மண்வெட்டியால் வெட்டிய பெயிண்டர் கைது

Published On 2021-04-04 14:10 GMT   |   Update On 2021-04-04 14:10 GMT
வாய்தகராறில் டிரைவரை மண்வெட்டியால் வெட்டிய பெயிண்டர் கைது செய்யப்பட்டார்.
கடலூர்:

கடலூர் உண்ணாமலை செட்டிசாவடியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 35), டிரைவர். இவர் அதே பகுதியை சேர்ந்த பெயிண்டரான ராஜா (40) என்பவருக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் சிவக்குமாரும், ராஜாவின் மற்றொரு வீட்டில் வாடகைக்கு வசித்து வரும் கணேஷ்பாபு என்பவரும் தங்கள் வீடுகளில் கழிவறை கதவும், மின்இணைப்பும் சரியில்லை என்றும், அதனை சரிசெய்து தரும்படி ராஜாவிடம் கூறியுள்ளனர். அப்போது அவர்களுக்குள் வாய்தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் 3 பேரும் அங்கிருந்து கலைந்து சென்று விட்டனர்.

இந்த நிலையில் சிவக்குமார் தனது வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது ராஜா அவரது வீட்டுக்குள் நுழைந்து, மண்வெட்டியால் சிவக்குமாரின் தலையில் வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். 

இதுகுறித்த புகாரின் பேரில் கடலூர் புதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜாவை கைது செய்தனர்.
Tags:    

Similar News