செய்திகள்
மின் கம்பம் பழுதால் 6 மாதமாக இருளில் தவிக்கும் மூதாட்டி
பலமுறை மின் வாரியத்திடம் புகார் அளித்தும் இதுவரை சரி செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் பெரியாரியபட்டி காலனி பகுதியை சேர்ந்தவர் கருணையம்மாள் (வயது65). இவரது கணவர் சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார் .
இதனால் தனியே வசித்து வருகிறார். இந்த நிலையில் கருணையம்மாளின் வீட்டிற்கு அருகே உள்ள மின் கம்பம் பழுதடைந்து எந்நேரமும் உடைந்து விழும் அபாயம் உள்ளதால் அதிலிருந்து கருணையம்மாள் வீட்டிற்கு மின் இணைப்பு பழுதானது.
இதனை சரிசெய்ய கோரி பலமுறை மின் வாரியத்திடம் புகார் அளித்தும் இதுவரை சரி செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் மின்கம்பத்தை மாற்ற கடந்த 6 மாதங்களுக்கு முன்பே புதிய கம்பம் கொண்டுவரப்பட்டு அங்கே போடப்பட்டு உள்ளது. ஆனாலும் இன்னும் கம்பம் மாற்றப்படவில்லை.
இதனால் கடந்த 6 மாதமாக கருணையம்மாள் இருட்டில் தவித்து வருகிறார். எனவே மின் வாரிய அதிகாரிகள் மின் கம்பத்தை மாற்றி வீட்டிற்கு மின்சாரம் வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.