செய்திகள்
எல்லை வழியாக ஊடுருவிய 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை -பாதுகாப்பு படை அதிரடி
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினர் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
ஜம்மு:
ஜம்மு காஷ்மீரில் பதுங்கியிருந்து நாசவேலைகளில் ஈடுபடும் பயங்கரவாதிகளை ஒழிக்க ராணுவம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ராணுவத்தின் தேடுதல் வேட்டையில் ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ஜம்மு மாவட்டம் நக்ரோட்டா நகரில் உள்ள பான் சுங்கச்சாவடி நோக்கி இன்று அதிகாலையில் பயங்கரவாதிகள் வாகனத்தில் வருவதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு பாதுகாப்பு படையினர் வாகன சோதனையை தீவிரப்படுத்தினர். அப்போது ஒரு வாகனத்தை சோதனையிட முயன்றபோது, உள்ளே இருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர்.
இந்த என்கவுண்டர் காரணமாக ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டது. அப்பகுதிக்கு ஏராளமான ராணுவ வீரர்கள் விரைந்தனர். பயங்கரவாதிகள் இருந்த வாகனத்தை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து அதிரடி தாக்குதலில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் நீடித்த இந்த சண்டையில் 4 பயங்கரவாதிகளையும் பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். ஒரு போலீஸ்காரர் காயமடைந்தார். பயங்கரவாதிகள் பயன்படுத்திய 11 ஏகே-47 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சம்பா செக்டாரில் இருந்து பயங்கரவாதிகள் ஊடுருவி நக்ரோட்டா சுங்கச்சாவடி நோக்கி வருவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அவர்கள் சுற்றி வளைக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டதாக சிஆர்பிஎப் தெரிவித்துள்ளது. சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் ஜெய்ஷ் இ முகமது அமைப்பைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என கூறப்படுகிறது.