செய்திகள்
சாலை விரிவாக்கம் - இலவச வீட்டுமனை பட்டா கேட்டு மனு
மழைக்காலத்தில் விபத்துகள் ஏற்படும் அச்சத்துடன், வாகன ஓட்டிகள் அவ்வழியாக செல்ல வேண்டியுள்ளது.
உடுமலை:
உடுமலை கொங்கல்நகரம் நால்ரோட்டில் இருந்து பிரிந்து அணிக்கடவு செல்லும் ரோட்டை விரிவுபடுத்த வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடப்பட்டு வருகிறது. இது குறித்து விருகல்பட்டி ஊராட்சி தலைவர் அகல்யா, தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தலைவர் பிரகாஷ் உள்ளிட்டோர் உடுமலை எம்.எல்.ஏ., ராதாகிருஷ்ணனிடம் மனு அளித்தனர்.
அதில் கொங்கல் நகரம் -அணிக்கடவு வரையிலான 6 கி.மீ., தொலைவுக்கு ரோடு மிக குறுகலாக, நீண்ட காலமாக விரிவுபடுத்தப்படாமல் உள்ளது. இதனால் வழித்தடத்தில் இயக்கப்படும் அரசு பஸ்கள் மற்றும் பிற வாகனங்கள் செல்ல சிரமமாக உள்ளது.
மழைக்காலத்தில் விபத்துகள் ஏற்படும் அச்சத்துடன், வாகன ஓட்டிகள் அவ்வழியாக செல்ல வேண்டியுள்ளது. எனவே விருகல்பட்டி உட்பட மூன்று ஊராட்சி மக்களின் நலனுக்காக ரோட்டை விரிவுபடுத்த வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோட்டமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட 60க்கும் மேற்பட்ட மக்கள் உடுமலை தாலுகா அலுவலகத்தில் திரண்டு, தாசில்தாரிடம் கோரிக்கை மனு அளித்தனர். மனுவில், கோட்டமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் வீடு இல்லாமல் வசிக்கும் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு அரசு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்.
இதற்காக ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் நிலத்தை கையகப்படுத்தி வீட்டுமனை பட்டா வழங்கினால் விவசாய தொழிலாளர்கள் உட்பட 60-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பயன்பெறுவார்கள். இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.