செய்திகள்
வன்னியரசு

விடுதலைப்புலிகள் பற்றி பேச்சு: தி.மு.க-காங்கிரசுக்கு விடுதலை சிறுத்தைகள் கண்டனம்

Published On 2019-11-22 10:20 GMT   |   Update On 2019-11-22 10:20 GMT
விடுதலை புலிகளால் சோனியா காந்தியின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக சுட்டிக் காட்டிய டிஆர் பாலுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

சென்னை:

காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு அளிக்கப்பட்ட கருப்பு பூனைபடை பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது. இதற்கு தி.மு.க., காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதுதொடர்பாக பாராளு மன்றத்தில் தி.மு.க. எம்.பி, டி.ஆர்.பாலு பேசும்போது, விடுதலை புலிகளால் சோனியாவின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக சுட்டிக் காட்டினார்.

இதற்கு தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ‘இந்த பேச்சு இனத்துரோகம்’ என்று விமர்சித்தார்.

இப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியும், தி.மு.க., காங்கிரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த கட்சியின் துணைப் பொது செயலாளர் வன்னியரசு தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

விடுதலைப்புலிகள் தேசத்தின் பாதுகாவலர்கள். சிங்கள, பவுத்த பயங்கரவாதத்துக்கு எதிராக தம்மக்களை காப்பாற்றிய மக்கள் இயக்கமே விடுதலைப்புலிகள். அப்படிப்பட்ட புலிகளை அழித்துவிட்டதாக அறிவித்த பிறகும் விடுதலை புலிகளை வைத்து பாதுகாப்பு கேட்பது நாகரீகமா? என்று பதிவிட்டுள்ளார்.


ஏற்கனவே சென்னை மாநகராட்சியை தனித் தொகுதியாக அறிவிக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியை திருமாவளவன் நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.

கூட்டணியில் இருந்து கொண்டு விடுதலை சிறுத்தைகள் இவ்வாறு செயல்பட்டது தி.மு.க. தரப்பில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இப்போது விடுதலைப் புலிகள் விவகாரத்திலும் தி.மு.க.வுக்கு எதிராக கருத்து தெரிவித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News