திருத்துறைப்பூண்டியில் லோடு வேனில் மதுபாட்டில்களை கடத்திய டிரைவர் கைது
திருத்துறைப்பூண்டி:
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பழைய பஸ் நிலையம் பகுதியில் திருத்துறைப்பூண்டி போலீசார் மற்றும் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த லோடுவேனை மறித்து சோதனை செய்தனர். இதில் 12 பெட்டிகளில் மதுபாட்டில்கள் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து லோடுவேன் டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், திருத்துறைப்பூண்டி வெட்டுக்குள தெருவை சேர்ந்த சேகர் மகன் வினோத் (வயது 30) என்பதும், மதுபாட்டில்களை கடத்தி வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து கடத்தி வந்த 576 மதுபாட்டில்கள், கடத்தலுக்கு பயன்படுத்திய லோடுலேன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து திருத்துறைப்பூண்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிச்சாமி, இன்ஸ்பெக்டர் அன்பழகன், சப்-இன்ஸ்பெக்டர் தேவதாஸ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து வினோத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.